பெங்களூர்: இளைஞர் தற்கொலை… பிரதமர் மன்மோகன் சிங்தான் காரணம் என கடிதம்
பெங்களூர்: பெங்களூரில் ஷூ விற்பனைக் கடையில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்தான் தனது தற்கொலைக்குக் காரணம் என அவர் கடிதம் எழுதி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிக்மஹளூர் மாவட்டம் சாகலேஸ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் கவுடா. வயது 32. இவர் பியூசி படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு 12 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூர் வந்துள்ளார். அங்கு ஷூ கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
அவர் தசரஹல்லியில் ஒரு அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணமாகவில்லை. வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியவில்லை என்பதால் விரக்தி நிலையை அடைந்தார். இதனையடுத்து கடந்த வியாழக்கிழமையன்று தனது படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவ தினத்தன்று சந்தோஷ் வீடு நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருப்பதைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் எட்டிப் பார்த்த போது சந்தோஷ் தூக்கில் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசில் தகவல் தெரிவித்தார்.
சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் சந்தோஷ் எழுதிய தற்கொலை கடிதத்தை படித்து அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் தனது தற்கொலைக்குக் காரணம் பிரதமர் மன்மோகன்சிங்கின் ஆட்சிமுறைதான் என்றும், இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க முடியாமல் இருப்பதும்தான் காரணம் என்றும் எழுதி வைத்துள்ளார்.
பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நடத்திய விசாரணையில் சந்தோஷ் கடந்த சில ஆண்டுகளாகவே மனஅழுத்தப் பிரச்சினையில் சிக்கியிருந்தார் என்று கூறியுள்ளனர். வயதான பெற்றோர்களை சரியாக கவனிக்க முடியாமல் வருத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications