கர்நாடகா: ஹாசனில் எஸ்ஐடி குழு.. பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களிடம் விசாரணை!
ஹாசன்: கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி சிட்டிங் எம்பியும் பாஜக கூட்டணியான ஜேடிஎஸ் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான ரேவண்ணா ஆகியோர் மீது பாலியல் பலாத்கார புகார்கள், ஆபாச வீடியோக்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் ஹாசனில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. பிரஜ்வல் போட்டியிட்ட ஹாசனில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவுக்கு முன்னதாக பல நூறு பெண்களை மிரட்டி பிரஜ்வல் பலாத்காரம் செய்தது, உல்லாசமாக இருந்தது தொடர்பான வீடியோக்கள் காட்டுத் தீயாக பரவி பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது. இது கர்நாடகாவில் ஜேடிஎஸ்- பாஜக கூட்டணிக்கு மிகப் பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.

பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் ஆணையமும் முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பியது. இதனடிப்படையில் மாநில சிறப்பு புலனாய்வுக் குழு - எஸ்.ஐ.டி. விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இந்த விசாரணை உத்தரவு வெளியான நேரத்தில் இந்தியாவை விட்டே பிரஜ்வல் ரேவண்ணா தப்பி ஓடிவிட்டார்.
தற்போது பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ஜேடிஎஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ஆகியோர் ஜேடிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட இருக்கின்றனர்.
இதனிடையே சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் நேற்று ஹாசன் சென்றனர். போலீஸ் எஸ்பி சீமா லட்கர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு ஹாசன் சென்றது. ஹாசன் எஸ்.பி. முகமது சுஜிதாவை சந்தித்து பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் ஒலேநரசிப்புரா போலீசார் பதிவு செய்த வழக்கு விவரங்கள், எஸ்.ஐ.டி. குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோக்களையும் எஸ்.ஐ.டி. குழு ஆய்வு செய்தது.
மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரம் செய்யப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களிடமும் எஸ்.ஐ.டி. குழு விசாரணை நடத்தியது. சில பெண்களிடம் வீடியோ கால் மூலமும் விசாரித்தனர் அதிகாரிகள். யார் யார் மிரட்டி பலாத்காரம் செய்தது? வீடியோவை பதிவு செய்தது யார் யார்? என்பது உள்ளிட்ட விவரங்களைப் பெண்களிடம் இருந்து எஸ்.ஐ.டி. குழு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். மேலும் 3,000-க்கும் மேற்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவ், சிடிக்களையும் எஸ்.ஐ.டி. குழுவினர் பெற்றுக் கொண்டனர். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான எஸ்.ஐ.டி.குழுவின் விசாரணை படுதீவிரமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications