காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரை திறக்க கர்நாடகா திடீர் முடிவு!!
பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரைத் திறக்க கர்நாடகா அரசு திடீரென முடிவு செய்துள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல முறை உத்தரவிட்டும் கர்நாடகா அதை அமல்படுத்தவில்லை. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் கர்நாடகா அரசு எதிர்த்தது. மத்திய அரசும் தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காவிரியில் தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட நீரின் அளவு குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே பெங்களூருவில் இன்று கர்நாடகா சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு சட்டசபை கூட்டத்தின் முடிவில் தமிழகத்துக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரை திறக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் கர்நாடகாவின் 4 அணைகளில் 34.13 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளது. இதனால் பெங்களூரு குடிநீர், மாண்டியா மற்றும் தமிழகத்தின் பாசன தேவைகளுக்கு வினாடிக்கு 10,000 கன அடிநீரை திறக்க முடிவு செய்துள்ளதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.