'கடைசி நேரத்தில்' தட்டிப் பறிக்கப்பட்ட காவிரி.. "டிராமா" போட்ட கர்நாடகாவுக்கு ஹாட்ரிக் வெற்றி!
டெல்லி: காவிரி பங்கீடு விவகாரத்தில் முதலில் வெற்றிகளை சுவைத்து வந்த தமிழகம் தற்போது குப்புற தள்ளிவிடப்பட்டுள்ளது. தனது பல்வேறு வகையான துரித நடவடிக்கைள் மற்றும் ராஜதந்திரங்கள் மூலம், கர்நாடகா ஒரு சொட்டு தண்ணீரையும் 'திறந்துவிட மாட்டோம்' என்ற தனது பிடிவாதத்தில் ஜெயித்துவிட்டது.
நடுவர் மன்ற உத்தரவுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சுமார் 50 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிடுங்கள், என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதான், இந்த பிரச்சினையின் ஆரம்ப புள்ளி.
கடந்த மாதம் 2ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த தனது முதல் உத்தரவில், அடுத்த 10 நாட்களுக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்பதால் தண்ணீரை திறந்துவிட்டது. இதற்கு கர்நாடகா முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. முதலமைச்சர் சித்தராமையாவின் உருவப்படம் பல்வேறு இடங்களில் கொளுத்தப்பட்டது.

சீராய்வு மனு
இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தங்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லையென்றும், இதனால், தண்ணீர் திறக்கும் உத்தரவு மீது உடனடி மறு உத்தரவு பிறப்பிக்க கர்நாடகம் கோரிக்கை விடுத்தது.

தமிழர் மீது தாக்குதல்
இதனிடையே, தமிழகத்திற்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்து வெளியிட்ட பெங்களூரை சேர்ந்த, தமிழக இளைஞர் மீது தாக்குதல் நடத்திய கன்னட அமைப்பினர் சிலர், அதனை இணையத்தில் பதிவேற்றி மகிழ்ந்தனர். இதனை அடுத்து, தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்ததுடன், கன்னட பதிவு எண் கொண்ட வாகனங்கள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.

சாடிய சுப்ரீம்கோர்ட்
இதையடுத்து செப்டம்பர் 12ம் தேதி மீண்டும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகாவில் நடைபெறும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தண்ணீரை திறக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், மேலும் 3 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கவும் உத்தரவிட்டனர். செப்டம்பர் 17ம் தேதி வரை 15,000 கன அடி தண்ணீர் திறக்கவும், 18, 19, 20 ஆகிய தேதிகளில் 12,000 கன அடி தண்ணீர் திறக்கவும் உத்தரவிடப்பட்டது.

பெங்களூர் கலவரம்
சீராய்வு மனுவை தாக்கல் செய்த கர்நாடகாவுக்கு கூடுதலாக இழப்பே ஏற்பட்டது. இதையடுத்து அன்று பெங்களூரில் பெரும் வன்முறை வெடித்தது. தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும், அடையாறு ஆனந்தபவன் உணவகங்கள் சூறையாடப்பட்டன. பூர்விகா நிறுவனம் கல்வீச்சுக்குள்ளானது. ஏராளமான வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டதால் பெங்களூரு நகரில் பதற்றம் ஏற்பட்டது.

சட்டசபை தீர்மானம்
இதையடுத்து 19ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, செப்டம்பர் 21-27 வரை 6,000 கன அடி நீரை தமிழகத்திற்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவில் நெருக்கடி அதிகரித்ததால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத கர்நாடகா கடந்த மாதம் 24ம் தேதி சிறப்பு சட்டசபையை கூட்டியதோடு கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதால் கர்நாடகாவிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று தீர்மானம் போட்டது.

கர்நாடகாவுக்கு எச்சரிக்கை
இதன்பிறகு சொன்னபடியே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த 27ந் தேதியன்று காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது அப்போது மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. மேலும், சட்டசபை தீர்மானம் தங்களை கட்டுப்படுத்தாது என்றும், தண்ணீரை திறந்து விட்டே ஆக வேண்டும் என்றும், நீதிமன்ற மாண்பை குலைக்க கூடாது எனவும் கர்நாடகாவுக்கு எச்சரிக்கைவிடுத்தது.

காவிரி மேலாண்மை வாரியம்
அப்படியும் அசரவில்லை கர்நாடகா. தண்ணீரை திறக்கவில்லை. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அக்டோபர் 4ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவேண்டும். காவிரி பாயும் மாநிலங்களான தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் தங்களது தரப்பு பிரதிநிதியை சனிக்கிழமை மாலை 4 மணிக்குள் அறிவிக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மீண்டும் சட்டசபை
தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடாவிட்டால் என்ன செய்வது என தங்களுக்கு தெரியும் எனவும், சுப்ரீம்கோர்ட் எச்சரித்தது. கர்நாடகாவுக்கு கடைசி எச்சரிக்கை எனவும் கூறியது. இதனால் நேற்று சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்திய கர்நாடகா, ஒப்புக்கு கொஞ்சம் தண்ணீரை திறக்க சம்மதித்தது. இதையே காரணம் காட்டி, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது வாதிட்டது கர்நாடகா.

கடைசி நேர நாடகம்
கர்நாடகாவின் கடைசிநேர நாடகம், உச்சநீதிமன்றத்தை திருப்தி செய்துள்ளது. இன்னும் இரு நாட்களுக்குள் 36 ஆயிரம் கன அடி தண்ணீரை தமிழகத்திற்கு தருவதாக ஒப்புக்கொண்ட கர்நாடகாவால் திருப்தியடைந்த உச்சநீதிமன்றம், அதன்பிறகு 17ம் தேதிவரை தினமும் 2 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு விட்டால் போதும் என கூறியதோடு, கர்நாடக அணை பகுதியிலுள்ள தண்ணீர் அளவை சோதிக்க காவிரி மேற்பார்வை குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.

ஹாட்ரிக் வெற்றி
மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் புண்ணியத்தால், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான உத்தரவையும் ரத்து செய்துவிட்டது சுப்ரீம் கோர்ட். தண்ணீர் அளவை சோதிக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமையக்கூடாது, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் ஆகிய இம்மூன்று வாதங்களிலும் கர்நாடகா ஜெயித்துள்ளது.

ராஜதந்திரம் வென்றது
ஏனெனில் 2 ஆயிரம் கன அடி நீரை கர்நாடகா திறக்க கூட வேண்டாமாம். வடிந்து ஓடும் நீரே அந்த அளவுக்குதான் இருக்குமாம். எனவே அரசியல் காய் நகர்த்தல், உமா பாரதி ஐடியா, தேவகவுடா உண்ணாவிரதம், முதல்வரின் டெல்லி பயணம், அனைத்துக்கட்சி கூட்டம், இருமு்றை பேரவை கூட்டம் என கர்நாடகா எடுத்த நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்துள்ளது. வழக்கை மட்டும் தாக்கல் செய்துவிட்டு ஒன்றுமே செய்யாமல் சும்மா இருந்த தமிழக அரசுக்கு கடைசியில் தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது. பாவம் விவசாயிகள்.












Click it and Unblock the Notifications