மைசூரில் காதலியை சாக்கடையில் தள்ளி உயிருடன் எரித்துக் கொன்ற வாலிபர்
மைசூர்: கர்நாடகாவில் 22 வயது பெண்ணை வாலிபர் ஒருவர் தாக்கி சாக்கடையில் தள்ளி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிருத்திகா தேவி(22). அவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரமோத் குமார்(25) என்பவரை காதலித்துள்ளார். வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமான பிரமோத் கிருத்திகா உள்பட பல பெண்களை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கிருத்திகா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரமோத் குமாரை வலியுறுத்தி வந்துள்ளார். இதையடுத்து அவர் கிருத்திகாவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து கிருத்திகாவின் தொல்லை அதிகரித்ததால் அவரை கொலை செய்ய பிரமோத் முடிவு செய்தார். இதையடுத்து அவர் கிருத்திகாவை காரில் மைசூருக்கு அழைத்துச் சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார்.
டிசம்பர் 21ம் தேதி பிரமோத் கிருத்திகாவை காரில் வைத்து ஆள்நடமாட்டம் இல்லாத ஜெயபுரா பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரமோத் இரும்புக் கம்பியால் கிருத்திகாவை அடிக்க அவர் மயங்கி விழுந்துவிட்டார். இதையடுத்து பிரமோத் கிருத்திகாவை தூக்கிச் சென்று சாக்கடையில் போட்டுவிட்டு காரில் சென்றுவிட்டார்.
சில நிமிடங்கள் கழித்து வந்த பிரமோத் சாக்கடையில் பெட்ரோல் ஊத்தி, கிருத்திகாவை உயிருடன் எரித்துக் கொன்றார். சாக்கடையில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் கிடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானவற்றை ஆய்வு செய்து பிரமோதை பிடித்தனர்.
விசாரணையில் பிரமோத் முதலில் பொய் கூறியுள்ளார். பிறகு தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். வெளியூர் என்பதால் கிருத்திகாவை கொலை செய்துவிட்டு போலீசில் இருந்து எளிதில் தப்பிவிடலாம் என்று பிரமோத் நினைத்துள்ளார்.