ஐஎன்எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் திடீர் கைது! ஒரு நாள் சிபிஐ காவல் விதித்தது நீதிமன்றம்
Recommended Video
டெல்லி: ஐஎன்எக்ஸ் வழக்கு தொடர்பாக, சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்திற்கு ஒரு நாள் சிபிஐ காவல் விதித்து டெல்லி பட்டியாலா சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. கார்த்தி சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தரப்பு கோரிக்கை விடுத்ததை நீதிமன்றம் புறக்கணித்துவிட்டது.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற அனுமதியோடு லண்டன் சென்று இன்று சென்னை திரும்பிய நிலையில் அவரை சிபிஐ சென்னை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தது. சென்னை விமான நிலையத்தில் பெயர் குறிப்பிடப்படாத பகுதியில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள் அவரை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் டெல்லி அழைத்து சென்றனர்.
டெல்லியில் விசாரணை
மதியம் 1.30 மணியளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு கார்த்தி சிதம்பரத்தை அழைத்துச் சென்றனர். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடைபெற்றது. மாலை 4.45 மணியளவில் அவர் அங்கிருந்து பட்டியாலா நீதிமன்றத்திற்கு சிபிஐ அதிகாரிகளால் அழைத்து செல்லப்பட்டார்.
15 நாட்கள் காவல்
அப்போது கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கைவிடுத்தது.
வாத, பிரதிவாதங்கள்
கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைத்து வந்துள்ளார் என்பதையும், நாட்டை விட்டு ஓடிப்போகும் நபர் இல்லை என்பதையும் தெரிவித்தார். வாத, பிரதிவாதங்கள் தொடர்ந்து நடந்தன.
ஒருநாள் காவல்
இரவு 7.45 மணியளவில் கார்த்தி சிதம்பரத்திற்கு 1 நாள் சிபிஐ விசாரணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே அடுத்த 24 மணி நேரம் அவர் சிபிஐ விசாரணையின்கீழ் இருப்பார்.