காஷ்மீர் தாக்குதல்: இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் மத்தியஸ்தம்- பாகிஸ்தான் பிரதமர் வரவேற்பு!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதால் பாகிஸ்தான் கடுமையாக அச்சத்தில் உறைந்து போயுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளதை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வரவேற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் அதிமுக்கிய சுற்றுலா தலமான பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த பயங்கரவாதத் தாக்குதல் ஒட்டுமொத்த தேசத்தையே பெரும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது. பாகிஸ்தானின் வாழ்வாதாரமான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்த கையுடன், சிந்து நதிநீரை திறந்துவிடுவதையும் நிறுத்திவிட்டது. இந்தியாவைவிட்டு பாகிஸ்தானியர்கள் வெளியேற கெடு விதித்தது
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவுடனான சிம்லா ஒப்பந்தத்தை கைவிடுவதாக அறிவித்தது. பாகிஸ்தானின் இந்த பொறுப்பற்ற, பயங்கரவாத ஆதரவு நிலையால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து நம்மை சீண்டும் வகையில் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி தருகிறது.
இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்திருந்தது. ஈரான் அமைச்சர் சையது அப்பாஸ் அராச்சி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian), பிரதம ர் நரேந்திர மோடியை தொடர்பு கொண்டு பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இருதலைவர்களும் பயங்கரவாதத்தை ஒழிக்க இணைந்து செயல்படுவது என உறுதி அளித்தனர்.
இந்த நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பையும் தொடர்பு கொண்டு பேசியதாகவும், இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் தயாராக இருக்கிறது என கூறியதாகவும் பாகிஸ்தான் நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டது. மேலும் ஈரானின் இந்த மத்தியஸ்தம் முயற்சியை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஏற்றுக் கொண்டதாகவும் அந்த ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications