வரவேண்டாம் என சொல்லியும் காஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்.. திருப்பி அனுப்பிய அரசு!
ஸ்ரீநகர்: யூனியன் பிரதேசமான காஷ்மீரின் நிலை குறித்து நேரில் பார்வையிடுவதற்காக ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்ற நிலையில் அவர்கள் ஸ்ரீநகரிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டனர்.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து காஷ்மீர் நிலவரத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காஷ்மீருக்கு சென்றனர். ஆனால் அவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தி டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் 12 பேர் இன்று ஸ்ரீநகருக்கு சென்றுள்ளனர். 12 பேர் கொண்ட குழுவில் குலாம்நபி ஆசாத், ராகுல்காந்தி, ஆனந்த சர்மா, திருச்சி சிவா, சீதாராம் யெச்சூரி, தினேஷ் திரிவேதி, சரத் யாதவ் டி ராஜா உள்ளிட்டோர் புறப்பட்டனர்.
இதனிடையே அரசியல் தலைவர்கள் காஷ்மீருக்கு வந்தால் அமைதி பங்கம் ஏற்படும் என காஷ்மீர் அரசு அறிவுறுத்தியது. மேலும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளபோது தலைவர்கள் இங்கு வருவது உகந்ததல்ல. பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகளிடம் இருந்து மக்கள் காக்கப்படுவர். காஷ்மீரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில் ராகுல் தலைமையில் ஸ்ரீநகர் சென்ற எதிர்க்கட்சியினர் டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.