உமர் அப்துல்லா-அமித்ஷா டெல்லியில் திடீர் சந்திப்பு: காஷ்மீரில் ஆட்சியமைக்க வியூகம்
ஸ்ரீநகர்: தொங்கு சட்டசபை அமைந்துள்ள காஷ்மீரில் ஆட்சியமைப்பது குறித்து தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவும், பாஜக தலைவர் அமித்ஷாவும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
காஷ்மீர், ஜார்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலில் 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி 42 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அதேநேரம் 87 உறுப்பினர்களைக் கொண்ட காஷ்மீர் சட்டசபையில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மெகபூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பா.ஜனதாவுக்கு 25 தொகுதிகளும், உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரசுக்கு 12 தொகுதிகளும் கிடைத்தன. சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 7 இடங்களை கைப்பற்றினர்.

பெரும்பான்மைக்கு தேவையான 44 தொகுதிகள் எந்த கட்சிக்கும் கிடைக்காததால் காஷ்மீரில் ஆட்சி அமைவதில் இழுபறியும், சிக்கலும் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பாஜக, ஆட்சிமன்ற குழு கூட்டம் நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான அருண்ஜெட்லி, அருண்சிங் ஆகிய இருவரையும் காஷ்மீர் மாநிலத்தின் பார்வையாளர்களாக நியமிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே இன்று காலை டெல்லியிலுள்ள அமித்ஷா வீட்டுக்கு வந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா அங்கு சில காலம் ஆலோசனை நடத்தினார். இதன்பிறகு, அருண் ஜெட்லி மற்றும், பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் ஆகியோரையும் உமர் அப்துல்லா சந்தித்து பேசியுள்ளார். அரசியலில் இரு துருவங்களாக இருந்த தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், பாஜக தலைவரும் சந்தித்து பேசியுள்ளது காஷ்மீர் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் ஜனநாயக கட்சி காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றாலும், அல்லது பாஜக-தேசிய மாநாட்டு கட்சி இணைந்து ஆட்சியமைக்க முயன்றாலும் இரு கூட்டணிக்குமே 40 எம்.எல்.ஏக்கள் பலம்தான் இருக்கும். எனவே, சிறு கட்சிகள், சுயேச்சைகள் கைப்பற்றியுள்ள 7 உறுப்பினர்கள்தான் இவ்விரு கூட்டணிக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
இந்த 7பேரில் நான்குபேர் எந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்களோ அந்த கூட்டணியால்தான் காஷ்மீரில் ஆட்சியமைக்க முடியும். எனவே அவர்களின் ஆதரவை திரட்ட இரு கூட்டணிகளும் முயலுகின்றன. அமித்ஷா-உமர் அப்துல்லாவும் இதுகுறித்துதான் ஆலோசித்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது. எப்படியும் பாஜக கூட்டணி பக்கம் 7 பேரையும் இழுப்பது என்று உறுதிபூணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications