‘இங்கிலாந்தின் ஏஜெண்டாக செயல்பட்டார் மகாத்மா’... மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் கட்ஜூ
டெல்லி: இங்கிலாந்தின் ஏஜெண்டாக மகாத்மா காந்தி செயல்பட்டார் என விமர்சித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

அந்தவகையில், தற்போது தேசப்பிதா மகாத்மா காந்தி இங்கிலாந்தின் ஏஜெண்டாக செயல்பட்டதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கட்ஜூ.
மேலும், அதில் அவர் ‘மகாத்மா காந்தியின் உரைகள் மற்றும் செயல்பாடுகள் அவர் பிரிட்டிஷ் ஏஜெண்டாக செயல்பட்டதற்கு ஆதாரமாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு ஜாதி, மதம், இனம், மொழி உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளன. இவற்றைப் பிரிக்க ஆங்கிலேயர்கள் செய்த சதிக்கு மகாத்மா உடந்தையாக இருந்தார்' என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல், தன்னை சனாதன இந்து என வெளிப்படையாகவே கூறிய காந்தி, வர்ணாசிரம தர்மத்தைப் பின்பற்ற வேண்டும் என்றும், பசுக்களைப் பாதுக்காக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் மேற்கொண்டார். காந்தியின் இந்த நடவடிக்கைகள் இந்தியாவில் பிரிவினைவாதம் உருவாக தூண்டுதலாக அமைந்தது.
ரகுபதி ராகவ ராஜா ராம் என்ற இந்து பஜனைப் பாடலை தனது பொதுக்கூட்டங்களில் மக்களைப் பாட வைத்தார் காந்தி. இதனால் மற்ற மதத்தினர் மனம் புண்பட்டனர்' என அதில் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலனைக் கொண்டே இத்தகைய கருத்துக்களை வெளியிடுவதாகவும், மற்றபடி தான் ஒரு விளம்பரப் பிரியரல்ல என்றும் கட்ஜூ அதில் கூறியுள்ளார்.
மகாத்மா குறித்த கட்ஜூவின் இந்தக் கருத்தால் புதிய சர்ச்சை உண்டாகியுள்ளது.












Click it and Unblock the Notifications