என்னது கண்டனம் மட்டும்தானா? என்னை தூக்கிலிடுங்க..: 'விடாது கருப்பு' கட்ஜு
டெல்லி: காந்தியை விமர்சித்ததற்காக ராஜ்யசபாவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தம்மை தூக்கிலிட வேண்டும் என்றும் கூறி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மார்க்கண்டேய கட்ஜூ தமது http://justicekatju.blogspot.in/ வலைபக்கத்தில் கடந்த சில நாட்களாக மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். நாட்டின் தேசத்தந்தை எனப் போற்றப்படுகிற மகாத்மாயின் கொள்கைகளே முட்டாள்தனமானவை; காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட் என அடுக்கடுக்கான விமர்சனங்களை கட்ஜூ முன்வைத்திருந்தார்.

அத்துடன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை ஜப்பானின் உளவாளி எனவும் சாடியிருந்தார் கட்ஜு. அவரது இந்த விமர்சனங்கள் குறித்து ராஜ்யசபாவில் நேற்று விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய அனைத்து கட்சி எம்.பி.க்களும் கட்ஜூவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் ஒருமனதாக கட்ஜூவுக்கு கண்டனம் தெரிவித்து ராஜ்யசபாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அமைதி காக்க மறுத்திருக்கும் கட்ஜூ மீண்டும் தமது வலைதளத்தில் 'பஞ்சாயத்தை' கூட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ளதாவது:
என்னே வியப்பான செய்தி. எனக்கு கண்டனம் தெரிவித்து ராஜ்யசபா தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. ஆனால் அது மட்டும் போதாது.

தேசத்தந்தை என்று அழைக்கப்படும் வஞ்சகரைப் பற்றியும், ஜப்பானிய பாசிச சக்திகளின் ஏஜெண்டை பற்றியும் தெரிவித்த கருத்துக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும்.
எனது சலுகைகளை பறிக்க வேண்டும் என்று சில எம்.பி.க்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு விதிகளை திருத்த வேண்டி இருக்கும். எம்.பி.க்களுக்கு ஐடியா தட்டுப்பாடு இருப்பதாக கருதி, அவர்களுக்கு நானே யோசனை கூறுகிறேன்.
நான் வெளிநாட்டில் இருந்து திரும்பியவுடன், என்னை கைது செய்து, விசாரணையே இன்றி தூக்கில் போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
இவ்வாறு கட்ஜூ எழுதியுள்ளார்.
இதுதான் "விடாது கருப்பு" என்பதோ












Click it and Unblock the Notifications