இந்தியாவை ‘சிங்கப்பூர்’ ஆக்கும் முயற்சி... வரிந்து கட்டி சபதமெடுக்கும் நமது அரசியல் தலைவர்கள் !!
டெல்லி: ஆந்திராவில் இருந்து பிரிந்து கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய மாநிலமாக உருவாக்கப்பட்ட தெலுங்கானாவை சிங்கப்பூரைப் போல் உயர்த்துவேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்.
சமீபகாலமாக இந்தியாவின் சில முக்கிய நகரங்களை சிங்கப்பூருக்கு இணையான நகரங்களாக மாற்றும் முயற்சியில் நமது அரசியல் தலைவர்கள் சிலர் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். அங்கு சுற்றுப்பயணமாக செல்லும் நமது அரசியல் தலைவர்கள், சிங்கப்பூரின் அழகில் கவர்ந்திழுக்கப்பட்டு இவ்வாறு தெரிவித்து வருகின்றனர்.
சுப்ரமணிய சுவாமி, சுஷ்மா சுவராஜ், சந்திரபாபு நாயுடு ஆகியோரைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் சிங்கப்பூரை உருவாக்கும் திட்டத்தில் புதிதாக இணைந்திருக்கிறார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.
மதுரையை மாற்றுவேன்...
இப்போதைய தலைவர்களுக்கெல்லாம் முன்னோடி சுப்ரமணிய சுவாமி தான். இவர் மதுரையை சிங்கப்பூராக மாற்றுவேன் என முன்பொரு முறை கூறியிருந்தார்.
சிங்கப்பூர் பயணம்...
அதேபோல், சமீபத்தில் இருநாடுகளுக்கும் தூதர அமைப்பிலான உறவு உதயமாகி 50 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு சிங்கப்பூர் சென்றிருந்தார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.
லிட்டில் சிங்கப்பூர்...
சுற்றுப்பயணம் முடிந்து இந்தியா திரும்பிய சுஷ்மா, இங்கு ரூ.7,060 கோடி மதிப்பீட்டில் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்கும் லிட்டில் சிங்கப்பூர் திட்டத்திற்கு சிங்கப்பூர் அரசு உதவி செய்கிறது என அறிவித்தார்.
சந்திரபாபு நாயுடு...
ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிந்த போதிலும் ஹைதராபாத் தான் இரண்டிற்கும் ஒரே தலைநகராக உள்ளது. இந்நிலையில், ஆந்திராவில் சிங்கப்பூரைப் போன்ற ஒரு தலைநகரை உருவாக்குவேன் என உறுதிபடத் தெரிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு.
சபதம்...
தற்போது இவர்களின் வரிசையில் புதிதாக சேர்ந்துள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். சிங்கப்பூரில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் செய்துவிட்டு நாடு திரும்பிய சந்திரசேகர் ராவ், தனது மாநிலத்தை சிங்கப்பூருக்கு இணையாக உயர்த்துவேன் என சபதமேற்றுள்ளார்.
சிறிய நாடு...
மேலும், இது த்ஒடர்பாக அவர் கூறுகையில், ‘பல்வேறு இன்னல்களை கடந்து மிகச்சிறிய நாடான சிங்கப்பூர் அமெரிக்காவுக்கு நிகராக பொருளாதரத்தில் முன்னேறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பாராட்டு...
குடிக்கும் நீரைக் கூட வெளிநாடுகளில் இருந்து விலை கொடுத்து இறக்குமதி செய்யும் சிங்கப்பூரை வியக்கத்தக்க வகையில் முன்னேற்றியதில் அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யெவ்-வின் பணித்திறமை பாராட்டுக்குரியது.
புதிய விசயங்கள் கற்றுக் கொண்டேன்...
இந்த சிங்கப்பூர் பயணத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அனைத்து துறைகளிலும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கான காரணிகள் என்ன? என்பதை நான் அறிந்து வந்துள்ளேன். இதன் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்தின் மறுசீரமைப்புக்கான திட்டம் தீட்டப்பட்டு, விரைவில் நிறைவேற்றப்படும்.
திட்டமிட்டு பணி...
நமது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் அனைவரும் ஒருமுறை சிங்கப்பூரை பார்வையிட்டு, அதைப்போன்ற முன்னேற்றம் தங்கள் பகுதியில் ஏற்படும்படி திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.