தனது பேரணியிலேயே 'சிக்கி' வேட்பு மனு தாக்கலை தவறவிட்ட கெஜ்ரிவால்- இன்று தாக்கல்!
டெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் அரவிந்த் கெஜ்ரிவால், அவருடைய ஆதரவாளர்களினால் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாமல் போன சோகம் நேற்று ஏற்பட்டது. ஒருவழியாக இன்று சுதாரித்த கெஜ்ரிவால் வேட்புமனுவை ஒருவழியாக தாக்கல் செய்தார்.
டெல்லியில் பிப்ரவரி 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். எனவே ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக வந்தார்.

கெஜ்ரிவால் ஊர்வலம்
வால்மீகி மந்தர் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் வரை 7 கி.மீட்டர் தூரம் கெஜ்ரிவால் பேரணியாக சென்றார். பேரணியில் கூட்டம் அதிகம் இருந்ததால் அவர் வேட்பு மனு பெறும் அதிகாரி இருக்கும் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் போனது.

திக்கி திணறி…
பிற்பகல் 3 மணிக்குள் மனுவை வழங்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் பேரணியில் கூட்டம் அதிகமாக இருக்கவே, வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தை அடைய அதிகமாக சிரமப்பட்டார் கெஜ்ரிவால். தனக்காக கூடிய கூட்டம், தான் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கே வேட்டு வைத்துவிட்டதே என்று வேதனைப்பட்ட அவர் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்யாமல் திரும்பினார்.

வெற்றி நிச்சயம்
இந்த தேர்தலில் தமக்கு வெற்றி கிடைக்கும் என கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரும் 10ம் தேதி புதிய வரலாறு படைப்போம். பா.ஜ.க தேவையற்ற வதந்திகளை பரப்பி வருவதாகவும் அவர் குறை கூறியுள்ளார்.

கடைசி நாளில் தாக்கல்
வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் சுறுசுறுப்பாக முன்கூட்டியே ஊர்வலமாக கிளம்பிய கெஜ்ரிவால் தனது வேட்புமனுவை ஒருவழியாக தாக்கல் செய்தார்.

விழாக்கோலம்
தேர்தலை முன்னிட்டு தலைநகரான டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆங்காங்கே தோரணங்கள், மேளதாளங்கள் முழங்குகின்றன. இன்று முக்கிய தலைவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் தொண்டர்கள் தொப்பி அணிந்தபடி ஆங்காங்கே ஆட்டம் பாட்டத்துடன் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக காணப்பட்டனர்.












Click it and Unblock the Notifications