நிர்பயா பாலியல் கொலை: டெய்லர் கடை வைக்க ஆசைப்படும் முக்கிய இளம் குற்றவாளி
டெல்லி: நிர்பயா பலாத்கார கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்படவுள்ள இளம் குற்றவாளிக்கு டெய்லர் கடை வைக்கவும் அதற்கு தேவையான தையல் இயந்திரம், கத்தரி, டேப் போன்றவை வாங்க ரூ. 10 ஆயிரம் டெல்லி அரசு வழங்க வேண்டுமென டெல்லி சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில் நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளம் குற்றவாளி விடுவிக்கப்படுவது குறித்து குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை அணுகுவது என டெல்லி பெண்கள் ஆணையம் தீர்மானித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் நிர்பயா என்னும் இளம்பெண் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த நிர்பயா சிங்கப்பூர் மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சைக்கு பின் 2012ம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இதில், ஒருவர் சிறார் என்பதால் அவருக்கு 3 ஆண்டுகள் மட்டும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மூன்றாண்டு தண்டனை முடிந்து வரும் 20ம் தேதி அவர் விடுவிக்கப்பட இருந்தார். இது தொடர்பாக மருத்துவ மாணவியின் பெற்றோர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இளம் குற்றவாளியை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், இளம் குற்றவாளியால் மற்றவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்காது என்பதை உறுதிபடுத்தப்பட வேண்டும் என்றும், அவரை கண்காணிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விதிமுறைகள் வகுக்கும் வரை, அவரை விடுவிக்கக் கூடாது என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. இதில், இளம் குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலம் முடிவடைந்த நிலையில், அவரை விடுவிக்கப்படுவதில் எந்த தடையும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இளம் குற்றவாளி விடுதலை
சிறுவர் கூர் நோக்கு மையத்தில் கடந்த 3 ஆண்டுகளை கழித்த அவருக்கு தற்போது 21 வயதாகிறது. இவரது விடுதலைக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், சட்டத்தின்படியே அனைத்தும் நடந்திருப்பதாக நீதிமன்றம் தெரிவித்து விட்டது. தற்போது 21 வயதாகியுள்ள அவருக்கு தொடர்ந்து மனநல ஆலோசனைகள் மருத்துவ நிபுணர்கள் அளித்து வருகின்றனர். அத்துடன் விடுதலைக்கு பின், அவரது பெற்றோரிடம் ரகசியமாகவும் ஒப்படைக்கப்படவுள்ளார்.

டெய்லராக ஆசை
சிறுவர் கூர்நோக்கு மையத்தில் அந்த இளம் குற்றாவாளி டெய்லரிங் மற்றும் கேட்டரிங் பணிகளை ஆர்வமாக கற்றுள்ளார். அவருக்கு டெய்லராகவும் ஆசையுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து டெல்லி சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு, விடுவிக்கப்படவுள்ள இளம் குற்றவாளிக்கு டெய்லர் கடை வைக்கவும் அதற்கு தேவையான தையல் இயந்திரம், கத்தரி, டேப் போன்றவை வாங்க ரூ. 10 ஆயிரம் டெல்லி அரசு வழங்க வேண்டுமென பரிந்துரைத்துள்ளது.

புது வாழ்க்கைக்கு உதவி
இளம் குற்றவாளிக்கு மேற்கொண்டு சில உதவிகளை அளிப்பதற்காக தனியார் தொண்டு நிறுவனங்களை அணுகியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இளம் குற்றாவாளி இந்த சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவும் அவர் புது வாழ்க்கையை தொடங்க உதவி புரிய வேண்டுமென்பதற்காகவும் இத்தகைய உதவிகள் அவசியமாகிறது என்று சிறுவர்கள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

குடியரசுத்தலைவரிடம் முறையிட முடிவு
இதனிடையே நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இளம் குற்றவாளி விடுவிக்கப்படுவது குறித்து குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை அணுகுவது என டெல்லி பெண்கள் ஆணையம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள கருத்தில், நிர்பயா வழக்கு குற்றவாளி விடுவிக்கப்படுவது மிகவும் கவலைக்குரியது. அவர் விடுவிக்கப்படும் நாள் இந்திய வரலாற்றின் கருப்புநாளாகும் என்று கூறியுள்ளார்.

விடுதலை செய்ய எதிர்ப்பு
இதில் தலையீடுமாறு குடியரசு தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோரை ஆணையம் அணுகும் என்றார்.
நிர்பயா வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட இந்த இளம் குற்றவாளி விடுதலை செய்யப்படகூடாது என்றும் ஸ்வாதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications