5 நாட்களுக்குள் 2வது முறையாக கெஜ்ரிவாலுக்கு அறை: ஆட்டோ டிரைவருக்கு அடி, உதை
டெல்லி: வடமேற்கு டெல்லியில் பிரச்சாரம் செய்தபோது ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலுக்கு இன்று மீண்டும் அறை விழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் உள்ள சுல்தான்புரி பகுதியில் திறந்த வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது ஒருவர் கெஜ்ரிவாலுக்கு மாலை அணிவித்துவிட்டு கன்னத்தில் பளார் என அறைந்தார்.
இதில் கெஜ்ரிவாலின் கண்ணாடி கீழே விழுந்தது. மேலும் அவரது கண் வீங்கிவிட்டது. இதை பார்த்த ஆம் ஆத்மி கட்சியினர் அந்த நபரை பிடித்து அடித்தனர். அந்த நபர் ஆட்டோ டிரைவர் என்று தெரிய வந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 4ம் தேதி தான் டெல்லியில் உள்ள தக்ஷின்புரியில் பிரச்சாரம் செய்தபோது ஒருவர் கெஜ்ரிவாலை 2 முறை குத்திவிட்டு, அறையவும் செய்தார். இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக கெஜ்ரிவால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கெஜ்ரிவால் மீது மை வீசித் தாக்கிய பாஜகவைச் சேர்ந்த நச்சிகேட்டா வால்நேக்கர் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.