மோடி 'அலை'யை ஓரம் கட்டிய கேஜ்ரிவால்... நாளிதழ், டிவி, சோஷியல் மீடியாக்களில் கேஜ்ரிவால் முகமே!
காந்தி நகர்:2013ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வரை எந்த டிவியைப் போட்டாலும் நரேந்திர மோடியைத் தவிர மற்ற தலைவர்களின் பேச்சு உள்ளிட்டவற்றைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. அதேபோல பேஸ்புக், டிவிட்டர் என்று எதைத் திறந்தாலும் மோடி, மோடி, மோடியாகத்தான் இருந்தது. ஆனால் 8ம் தேதிக்குப் பிறகு அத்தனையைும் அப்படியே தலைகீழாக மாறி விட்டது. அந்த மாற்றத்தைக் கொண்டு வந்தவர் அரவிந்த் கேஜ்ரிவால். கிட்டத்தட்ட மோடி அலையை ஒன்றுமே இல்லாமல் செய்து விட்டார் கேஜ்ரிவால் என்கிறார்கள்.
இப்போது டிவி, சோஷியல் மீடியா என்று எங்கு பார்த்தாலும் கேஜ்ரிவால் குறித்த செய்திகள், விமர்சனங்கள், பேச்சாகத்தான் உள்ளது. வேறு வழியே இல்லாமல் அத்தனை பேரும் மோடியை விட்டு விட்டு கேஜ்ரிவால் பக்கம் திரும்ப வேண்டிய நிலை வந்துள்ளது.
டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவு வெளியான டிசம்பர் 8ம் தேதிக்குப் பிறகு நிலைமை இப்படித்தான் மாறிப் போயுள்ளது.

ஆம் ஆத்மியின் அசத்தல் 'பெர்பார்மன்ஸ்'
ஆம் ஆத்மி கட்சியினரே கூட எதிர்பார்க்காத அளவுக்கு டெல்லி சட்டசபையில் அக்கட்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்து, இப்போது அங்கு ஆட்சியையும் அமர்த்தி விட்டது.

புதிய 'சூப்பர் ஹீரோ'
கேஜ்ரிவாலை டிவி உள்ளிட்ட மீடியாக்கள் புதிய சூப்பர் ஹீரோவாக வர்ணித்து செய்திகளையும், விமர்சனங்களையும், அலசல்களையும், ஆய்வுகளையும் வெளியிட்டபடி உள்ளனர்.

மக்கள் மனதிலும் இவரே
அதேபோல டெல்லி சட்டசபைத் தேர்தல் முடிவுக்கு முன்பு வரை மோடியைப் பற்றியே் பேசி வந்த மக்களின் மனங்களும் கூட இப்போது கேஜ்ரிவாலைப் பற்றி ஆச்சரியத்துடன் அலசத் தொடங்கியுள்ளது. கேஜ்ரிவாலால் எப்படி சாதிக்க முடிந்தது, டெல்லியில் முடிந்தது நம்ம ஊரிலும் முடியாதா என்ற ஏக்கப் பெருமூச்சுடன் கூடிய விவாதங்களில் மக்கள் ஆர்வமாக ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அதற்கு முன்பு வரை மோடியால்தான் மாற்றத்தைத் தர முடியும் என்று அனைவரும் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டரில் மோடியை முந்திய கேஜ்ரிவால்
டிவிட்டரில் அதிகம் பேசப்படும் நபராக மோடியைப் பின்னுக்குத் தள்ளி கேஜ்ரிவால் வந்துள்ளார். அதாவது கேஜ்ரிவால் குறித்து 36.06சதவீதம் பேர் சாதகமாக பேசுகிறார்கள். மோடி குறித்து பேசுபவர்கள் 30.25 சதவீதமாகும்.

3வது இடத்துக்குப் போன ராகுல் காந்தி
மேலும் டிவிட்டர் பயன்படுத்துவோர் மத்தியில் அதிகம் பேசப்படுவோர் பட்டியலில் முதலிடத்தில் கேஜ்ரிவாலும், 2வது இடத்தில் மோடியும், 3வது இடத்தில் ராகுல் காந்தியும் உள்ளனர். இதுவரை ராகுல் காந்தி 2வது இடத்தில் இருந்தார். இப்போது கேஜ்ரிவால் வருகையால் அவர் 3வது இடத்துக்குப் போய் விட்டார்.

உத்தியை மாற்றாவிட்டால் மோடிக்குக் கஷ்டம்
பல்வேறு அரசியல் நிபுணர்களும், தகவல் தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து அறிந்தவர்களும் தற்போது மோடிக்குச் சொல்லும் அறிவுரை, உடனடியாக உத்தியை மாற்றுங்கள். இல்லாவிட்டால் கஷ்டம் என்றுதான். காரணம், கேஜ்ரிவால் அலை அவ்வளவு வேகமாக பரவிக் கொண்டிருக்கிறதாம்.

நாளிதழ்களிலும் முக்கியத்துவம் இழக்கும் மோடி
அதேபோல நாளிதழ்களிலும் கூட மோடிக்கான முக்கியத்துவம் படிப்படியாக குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இங்கும் கேஜ்ரிவால் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளாராம்.

கேஜ்ரிவால்தான் மோடிக்கு உண்மையான மிரட்டல்
முத்ரா தகவல் தொடர்பு மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீடியா ஸட்டி பிரிவு முதுநிலை பேராசிரியர் அரவிந்த் சின்ஹா கூறுகையில், கேஜ்ரிவால் வருகைக்கு முன்பு வரை மோடிதான் நாளிதழ்களையும், டிவிகளையும், சமூ்க வலைத்தளங்களையும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தார். ஆனால் கேஜ்ரிவாலின் திடீர் எழுச்சி அவரை பின்னுக்குத் தள்ளி விட்டது. மோடியின் இடத்தை அசுர வேகத்தில் கேஜ்ரிவால் ஆக்கிரமித்து விட்டார். உண்மையில் இப்போது மோடிக்கு பெரிய மிரட்டலாக கேஜ்ரிவால் உருவெடுத்து வருகிறார் என்று கூட சொல்லலாம். மோடி செய்தியை விட கேஜ்ரிவால் செய்திக்கு மக்கள் முக்கியத்துவம் தர ஆரம்பித்துள்ளனர் என்றார்.

பாஜக மறுப்பு
ஆனால் கேஜ்ரிவால் வருகையால் மோடிக்குப் பாதிப்பு என்று கூறப்படுவது தவறு என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ஆம் ஆத்மி மற்றும் கேஜ்ரிவால் வருகையால் மோடியின் செல்வாக்கு குறைந்து விட்டதாக கூறுவது தவறானதாகும். யாரைப் பிடிக்கிறதோ, அவர்களைக் காட்டுவது மீடியாக்களின் உரிமை. அதுகுறித்து நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications