"49 நாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்" கடந்து வந்த பாதை..
டெல்லி: இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் அரவிந்த் கேஜ்ரிவால். 15 ஆண்டுகால டெல்லி காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி அரசைக் கைப்பற்றியவர்.
வருமான வரித்துறையில் பணியாற்றி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து டெல்லி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கு மக்கள் ஆதரவு பெற்றவராக உருவெடுத்து ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தவர்..
சாமானியர்களின் கட்சிகளும் கூட ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிட முடியும் என்பதை நிரூபித்தாலும் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்ததால் 49 நாள் தாம் வகித்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் கேஜ்ரிவால்.
கேஜ்ரிவால் கடந்து வந்த பாதை...
ஹரியானாவில்..
ஹரியானா மாநிலத்தில் 1968ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ந் தேதி பிறந்தவர் அரவிந்த் கேஜ்ரிவால்.
ஐஐடியில் பொறியியல் படிப்பு
1989ஆம் ஆண்டு காரக்பூர் ஐஐடியில் மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டதாரியானார். பின்னர் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் இணைந்தார்.
ஐ.ஆர்.எஸ் தேர்வு
1995ஆம் ஆண்டு இந்தியன் ரெவின்யூ சர்வீஸ் தேர்வு எழுந்த பணியை ராஜினாமா செய்தார். பின்னர் அத்தேர்வில் தேர்ச்சி பெற்று வருமான வரித்துறையில் பணிக்கு சேர்ந்தார்.
இணை கமிஷனர் ராஜினாமா
2006ஆம் ஆண்டு வருமான வரித்துறையில் இணை கமிஷனராக இருந்த நிலையில் தமது பதவியை ராஜினாமா செய்தார் கேஜ்ரிவால்.
ஹசாரேவுடன் கை கோர்ப்பு
அதைத் தொடர்ந்து அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். 2011ஆம் ஆண்டு ஹசாரேவின் ஜன் லோக்பால் மசோதாவுக்கான போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஹசாரேவிடம் இருந்து விலகல்
பின்னர் அன்னா ஹசாரேவிடம் இருந்து 2012ஆம் ஆண்டு அரவிந்த் கேஜ்ரிவால் விலகினார். அதே ஆண்டு நவம்ப 26-ந் தேதி ஆம் ஆத்மி என்ற கட்சியை தொடங்கினார் கேஜ்ரிவால்.
டெல்லி தேர்தலில்..
2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிடும் என்று அறிவித்து கிலி ஏற்படுத்தினார்.
28 இடங்களில்..
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைக் கைப்பற்றி 2வது கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது.
டெல்லி முதல்வராக
8 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் ஆதரவு அளித்ததால் டிசம்பர் 28-ந் தேதி டெல்லி மாநிலத்தின் முதல்வரானார். அதைத் தொடர்ந்து நாள்தோறும் எதிர்க்கட்சிகளின் விமர்சனம்தான். டெல்லி மாநில காவல்துறையை மாநில அரசின் கீழ் கொண்டு வர தமது அமைச்சரவை சகாக்களுடன் வீதியில் இறங்கியும் போராடினார் கேஜ்ரிவால்.
ஜன்லோக்பால்
தமது லட்சியமான ஜன்லோக்பால் மசோதாவை டெல்லி சட்டசபையில் நிறைவேற்ற முயன்றார். ஆனால் ஊழலை ஒழிக்க வகை செய்யும் ஜன்லோக்பால் மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாவும் கை கோர்த்ததால் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை.
ராஜினாமா
இதைத் தொடர்ந்து தமது அமைச்சரவை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் நேற்று இரவு கடிதம் கொடுத்தார் கேஜ்ரிவால்.