மோடியும், ராகுலும் அம்பானியின் முகவர்கள்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று முந்தினம் மாலை தனது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். அதனைத் தொடர்ந்து டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் படுத்தப்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலின் ராஜினாமாவிற்கு வெளிப்படையான காரணமாக லோக்பால் மசோதா நிறைவேற்ற மறுப்புக் கூறப்பட்டாலும், அம்பானி சகோதரர்களின் குடைச்சலே முக்கியக் காரணம் என்றத் தகவலும் நிலவுகிறது.
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் அம்பானி குறித்து காரசாரமான கருத்தை வெளியிட்டுள்ளார் கெஜ்ரிவால். அதில், ‘வரும் நாடாளுமன்றத் தேர்தல், ஆம் ஆத்மி கட்சிக்கும் அம்பானிக்கும் இடையேயானது அம்பானியின் முகவர்களாக மோடியும், ராகுலும் செயல்படுகின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நரேந்திர மோடி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி நிறுவனத்துடனான தொடர்பு குறித்துவிளக்கமளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக, இயற்கை எரிவாயு விலை உயர்த்தப்பட்டதை ராகுல்காந்தி ஆதரிக்கிறாரா என்பது குறித்து இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.