குடியரசு தின விழாவின்போது 'ராஜ்பாத்'தை முற்றுகையிடுவோம்.. கெஜ்ரிவால் 'வார்னிங்'!
டெல்லி:மத்திய அரசுடன் சமாதானமாகப் போவது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு தவறினால் குடியரசு தின விழாவின்போது ராஜ்பாத்தை எங்களது லட்சக்கணக்கான தொண்டர்கள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதிப்பார்கள் என்று கெஜ்ரிவால் திடீரென மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் கூறும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் எங்களிடம் மாற்றம் ஏதும் இல்லை.

எங்களது போராட்டத்தை முடிக்க சமாதானப் பேச்சுக்கெல்லாம் இடமில்லை. டெல்லியில் பெண்களின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. இங்கு போராட்டம் நடத்துவோர் பாகிஸ்தானியர்களோ அல்லது அமெரிக்கர்களோ அல்ல. சொந்த மக்கள்.
குடியரசு தின விழாவைக் கொண்டாடுவோம் என்று கூறுகிறார் ஷிண்டே. யாருக்காக இதைக் கொண்டாடப் போகிறீர்கள்.. அணிவகுப்பையும், அலங்கார ரதங்களையும் விஐபிக்கள் பார்த்து ரசிப்பார்கள். அது குடியரசு தின கொண்டாட்டம் அல்ல.
எங்களது போராட்டம் தொடரும். எங்களது கோரிக்கை நிறைவேறாவிட்டால் குடியரசு தின விழா அணிவகுப்பின்போது லட்சக்கணக்கான தொண்டர்கள் ராஜ்பாத்தை முற்றுகையிடுவார்கள் என்று மிரட்டுவது போலக் கூறினார் கெஜ்ரிவால்.
டெல்லியை விளாசிய மழை.. கடும் குளிர்
இதற்கிடையே, டெல்லியை இன்று கன மழை குளிர வைத்து விட்டது. கூடவே கடும் குளிரும் சேர்ந்ததால் மக்கள் நடுங்கிப் போய் உள்ளனர். இந்த மழை மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மியினர் நார்த் பிளாக் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த மழையும் சேர்ந்து கொண்டதால அவர்கள் கடும் குளிரில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
காருக்குள் தஞ்சமடைந்த கெஜ்ரிவால்
கன மழை பெய்ததால் கெஜ்ரிவால் தனது காருக்குள் ஏறி தஞ்சமடைந்தார். அதேபோல மற்றவர்களும் தத்தமது வாகனங்கள், குடைகளுக்குள் புகுந்து கொண்டு மழையிலிருந்து சற்று தப்பித்தனர்.












Click it and Unblock the Notifications