கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தினமும் தேசியக்கொடி ஏற்றுக: மத்திய அரசு உத்தரவு
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தேச விரோத கோஷம் எழுப்பப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் தினந்தோறும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் தேசியகொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கேந்திரிய வித்யாலயா சார்பில் நாடு முழுவதும் 1100க்கும் அதிகமான பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில் தினமும் தேசியகொடி ஏற்றுமாறு கேந்திரிய வித்யாலயா சங்கேதனின் கூடுதல் கமிஷனர் யு.என்.கவரே, பள்ளி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாணவர்கள் மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக, பள்ளியின் முக்கியமான பகுதியில் தேசியகொடியை காலையில் ஏற்ற வேண்டும் எனக்கூறியுள்ள அவர், மாலையில் சூரியன் மறைவுக்கு முன் கொடியை இறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசியகொடி சட்டம் 2002 மற்றும் தேசிய சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம் 1971 போன்றவற்றை பள்ளிகள் கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications