கல்வீச்சில் காயமடைந்த கேரள முதல்வருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு
திருவனந்தபுரம்: கல்வீச்சு சம்பவத்தால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கேரள முதல்வர் உம்மன்சாண்டிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
கேரளாவில், சூரிய மின்தகடு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் கூரை (சோலார் பேனல் ) அமைத்து தருவதாக நடந்த ஊழலில், கேரள முதலமைச்சர் உம்மன்சாண்டிக்கும் பங்குள்ளது எனக் குற்றஞ்சாட்டி வரும் இடதுசாரிக் கட்சியினர், அவர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக உம்மன்சாண்டி செல்லும் இடங்களில் எல்லாம் அந்த கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள போலீஸ் மைதானத்தில் 43-வது வருடாந்திர மாநில போலீஸ் தடகள வீரர்கள் கூட்ட நிறைவு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று காரில் சென்றுக் கொண்டிருந்த போது, இடதுசாரி கட்சியினர் அவரது கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில், காரின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து, உம்மன்சாண்டி மீது விழுந்ததில், அவரது நெற்றியில் இலேசான காயம் ஏற்பட்டது. காயமேற்பட்ட போதும், அவர் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
முதல்கட்ட சிகிச்சைகளை கண்ணூரில் மேற்கொண்ட உம்மன்சாண்டி, அதனைத் தொடர்ந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் அழைத்துச் செல்லப் பட்டார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள உம்மன்சாண்டியை பரிசோதித்த மருத்துவர்கள் நெற்றிக் காயத்தால் ஆபத்தில்லை, ஆனால், நெஞ்சுப் பகுதியில் காயம் சற்று ஆழமாக உள்ளதாக தெரிவித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இத்தாக்குதல் தொடர்பாக மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என சுமார் ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் 21 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வ்ருகின்றனர்..
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெர்று வரும் உம்மன்சாண்டியை கேரள கவர்னர் நிகில் குமார், எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நேற்று சந்தித்து நலம் விசாரித்தனர்.
மேலும், உம்மன் சாண்டியின் உயிருக்கு ஆபத்து காத்திருப்பதால் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மாநில உள்துறை மந்திரி தலைமையில் நடைபெற்ற மூத்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ‘குண்டு துளைக்காத காரும், கூடுதலாக கமாண்டோ வீரர்களும் அவரது பாதுகாப்புகாக வழங்கப்படுவதாக' உள்துறை அமைச்சர் திருவாஞ்சூர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications