முல்லை பெரியாறு விவகாரம்: பிரதமரிடம் 2-வது முறையாக வலியுறுத்திய உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவது தொடர்பாக கேரள முதல்வர் உம்மண் சாண்டி பிரதமர் மோடியை சந்தித்து நேற்று 2-வது முறையாக நேரில் வலியுறுத்தியுள்ளார்.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளதைத் தொடர்ந்து அணை வலுவிழந்து உள்ளது எனவே புதிய அணை கட்டுவதுதான் ஒரே தீர்வாக இருக்கும் என கேரள முதல்வர் உம்மண் சாண்டி கூறிவருகிறார். கேரள மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முல்லைப்பெரியாரில் புதிய அணை கட்டியே தீருவோம்.

இன்று அல்லது நாளை அது நடந்தே தீரும். 999 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அணையின் பாதுகாப்பு குறித்து யாரேனும் உறுதியாக கூறமுடியுமா? எனவே புதிய அணை கட்டுவதே இந்த பிரச்சினைக்கு சிறந்ததாக இருக்கும் என தொடர்ந்து கூறிவருகிறார்.
இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போதும் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில், முல்லை பெரியாறு விவகாரம் குறித்து கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தனது அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து பேசினார்.
கேரள மாநிலத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு நேற்று வந்தார். அப்போது மோடியுடன், உம்மன் சாண்டியும் கேரள அமைச்சர்களும் 15 நிமிடம் நேரில் சந்தித்து பேசினர். அப்போது, முல்லைப் பெரியாற்றில் இரண்டாவது அணை கட்டுவது குறித்தும் முதலமைச்சர்கள் அளவிலான பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உம்மன் சாண்டி, பிரதமர் தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக உம்மன் சாண்டி பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது இது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications