பாலியல் புகார் பற்ற வைத்த நடிகை.. திரண்ட கட்சிகள்.. கேரளா காங்கிரஸ் நிர்வாகி ராஜினாமா
பாலக்காடு: தமிழ்நாட்டை போலவே கேரளா மாநிலத்திலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் அந்த மாநிலத்தின் சிட்டிங் எம்எல்ஏவும், காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகியுமான ராகுல் மம்கூடத்தின் மீது நடிகை ஒருவரும், பெண் எழுத்தாளரும் பாலியல் குற்றச்சாட்டு வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெருக்கடி எழுந்த நிலையத்தில் ராகுல் தன் கட்சி பணியை ராஜினாமா செய்திருப்பது கேரளா அரசியலில் புயலாக கிளம்பியுள்ளது.
கடவுளின் தேசமான கேரளாவில் இயற்கை சீற்றங்களுக்கு பஞ்சம் இருக்காது. ஒவ்வொரு வருடமும் தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா அதிகளவு சேதாரத்தை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் வயநாடு பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல நூற்றுக்கணக்கான மக்கள் மாயமானார்கள்.

மீண்டும் பாலியல் புகார்
மறுபக்கம் கேரளா திரையுலகில் நடிகைகளின் அடுத்தடுத்த பாலியல் புகார் வெளியாகி பிரளயத்தையே ஏற்படுத்தியது. இதுகுறித்து அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகைகள் திரையுலகில் உள்ள சக நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் மீது வெளிப்படையாக பாலியல் புகார் வைத்திருந்தனர். தற்போது பிரபல நடிகை ஒருவர் அந்த மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சி தலைவர் மீது பகீர் பாலியல் புகாரை வைத்திருக்கிறார்.
மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த 916 குஞ்சுட்டன் என்கிற படத்தில் நடிகை ரினி ஆன் ஜார்ஜ் நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் ரினி கேரளாவில் பிரபலமடைந்திருந்தார். அவர் நேற்று ஒரு இளம் அரசியல் கட்சி தலைவர் தனுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி ஹோட்டல் அழைப்பதாக பெயர் குறிப்பிடாமல் பதிவு போட்டிருந்தார்.
ஆணவத்துடன் பதில்
அந்தப் பதிவில் ரினி ஆன் ஜார்ஜ், "ஒரு இளம் அரசியல் தலைவர் எனக்கு ஆபாச புகைப்படம், வீடியோக்களை அனுப்பி அநாகரீகமாக பேசுகிறார். மேலும் ஹோட்டலுக்கு அழைக்கிறார். நான் இதை கண்டித்து, உங்கள் கட்சியில் புகார் அளிப்பேன் என கூறினேன். அதற்கு அவர் எங்கே புகாரளித்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று ஆணவமாக கூறுகிறார்.
இதுகுறித்து அவரின் கட்சி மேலிடத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவருக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அவரின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அந்த நபரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து புகார் அளித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என கூறியிருந்தார்.
எழுத்தாளரும் புகார்
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கேரளாவில் பிரபல எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாலக்காடு எம்எல்ஏவும், காங்கிரஸ் கேரளா மாநில இளைஞரணி தலைவருமான ராகுல் மம்கூடத்தி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னை போல ஏராளமானோரிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சக இளைஞரணி பெண்களே அவர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
தைரியம் இருந்தால் ராகுல் என் மீது அவதூறு வழக்கு தொடரட்டும்." என்று கூறியிருந்தார். அவர்களுக்கு ஆதரவாக பல பெண்களும் கருத்து தெரிவித்து, ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளும் சிபிஎம் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். நெருக்கடிகள் முற்றிய நிலையில் அவர் தன் கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நடிகை என் தோழி
இதுகுறித்து ராகுல் மம்கூடத்தின் வெளியிட்டுள்ள பதிவில், "அந்த நடிகை என்னை சொல்லவில்லை. அவர் என் தோழி. எங்கள் கட்சியும் என்னை ராஜினாமா செய்ய சொல்லவில்லை. தேர்தல் நெருங்கும் நிலையில் எங்களுக்கு நிறைய வேலைகள் உள்ளன. அதனால் நானே என் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இதுதொடர்பாக கட்சிக்கு விளக்கம் அளித்துள்ளேன்." என்றார்.
கேரளாவில் சிபிஎம் மற்றும் காங்கிரஸ் மாற்றி மாற்றி ஆட்சி அமைப்பார்கள். ஆனால் கடந்த 10 வருடங்களாக அங்கு சிபிஎம் தான் ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை தவறவிட்டு வரும் நிலையில், 2026 தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் இதுபோன்ற புகார்கள் காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்துவதாகவே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications