கேரளா மக்களுக்கு இலவச கால், டேட்டா சேவை வழங்கும் செல்போன் நிறுவனங்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் செல்போன் நிறுவனங்கள் இலவச கால், மொபைல் டேட்டா சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் வெள்ளப் பெருக்கு பேரிடர் ஏற்பட்டுள்ளதால் செல்போன் நிறுவனங்கள் கேரளாவில் இலவச சேவைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன.
கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால், ஏற்பட்ட வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 164 பேர் பலியாகியுள்ளனர். கேரளாவின் 14க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மின்சாரம் மற்றும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் கேரளா மக்களைக் காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன் விமானப்படை, கடற்படை, உள்ளிட்ட முப்படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை கேரளாவில் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, உடை அடிப்படை உதவிகளை அரசு செய்துவருகிறது. மத்திய அரசு பிற மாநில மக்களும் கேரளா மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் செல்போன் சேவை அளித்துவரும் ஏர்டெல், வொடஃபோன், அடியா, ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட செல்போன் சேவை நிறுவனங்கள் கேரளாவில் நிலவும் பேரிடர் காலத்தை கருத்தில் கொண்டு தங்கள் சேவையை இலவசமாக அளிக்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் கேரளாவில் மக்கள் செல்போன்களில் கட்டணமில்லாமல் பேசிக்கொள்ளலாம். அதோடு இணையத்தைப் பயன்படுத்திக்கொள்ள இலவச இண்டர்நெட் டேட்டாவும் அளிக்கப்பட்டுள்ளது. செல்போன் நிறுவனங்களின் இந்த அறிவிப்பால் பெரு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்கள் தங்கள் உறவினர்களுடன் தொடர்புகொண்டு தகவல் தெரிவிப்பதற்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கேரளா ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, ஏர்டெல் செல்போன் நிறுவனம் அறிவிக்கையில், கேரளாவில் ஏர்டெல் பிரிபேய்ட் சந்தாதாரர்களுக்கு ரூ.30 டாக்டைம் மற்றும் 1 ஜிபி மொபைல் டேட்டாவை ஒரு வார காலத்துக்கு இலவசமாக அளிப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்கள், பிராட்பேண்ட் உபயோகிப்பாளர்கள் தங்களுடைய கட்டணத்தை செலுத்துவதற்கான தேதியை நீட்டித்துள்ளதாகவும், முக்கியமான நிவாரண முகாம்களில் இலவச வைஃபை இணைய வசதியும் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதோடு, கேரளா மக்கள் தங்களுடைய போன்களை சார்ஜ் செய்துகொள்வதற்கும் இலவச போன் கால் செய்வதற்கும் திரிச்சூர் காலிகட், மலப்புரம், கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம், எர்ணாக்குளம் ஆகிய பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.
அதே போல, ஐடியா செல்போன் நிறுவனம் கேரளாவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பிரிபேய்ட் சந்தாதாரர்களுக்கு ரூ.10 டாக்டைம் இலவசமாக பேசுவதற்கு அளித்துள்ளது. கூடுதலாக பேச தேவை ஏற்பட்டால், *150*150# என்ற எண்ணுக்கு அழைத்து இலவச டாக்டைம் பெறலாம் என்று அறிவித்துள்ளது. மேலும், 1 ஜிபி டேட்டா இலவசமாக அளிப்பதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல், போஸ்ட்பேய்ட் வாடிக்கையாளர்கள் போன் கட்டணத்தை செலுத்தும் தேதியையும் நீட்டித்துள்ளது. ஐடியா செல்போன் நிறுவனங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுகு இலவசமாக உணவு அளிப்பதோடு வாடிக்கையாளர்களின் போன்களை சார்ஜ் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
வொடஃபோன் நிறுவனம் அறிவிப்பில், பிரிபேய்ட் சந்தாதாரர்களுக்கு ரூ.30 இலவச டாக்டைமும் 1 ஜிபி மொபைல் டேட்டாவும் இலவசமாக அறிவித்துள்ளது. மேலும், ஒரு ஜிபி டேட்டாவை இலவசமாக பெற வேண்டுமானால், CREDIT என்று டைப் செய்து *130*1# அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், போஸ்ட்பேய்ட் சந்தாதாரர்களுக்கு போன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் ஜியோ செல்போன் நிறுவனம் அறிவிக்கையில், கேரளாவில் நிலவும் பேரிடர் சூழலை கருத்தில் கொண்டு ஒரு வார காலத்துக்கு கேரளாவில் அனைத்து போன்கால்களும் மொபைல் டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் செல்போன் நிறுவனம் அறிவிக்கையில், வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து கேரளாவில் அனைத்து அழைப்புகளும் இலவசமாக பேச அனுமதிக்கப்படும். இருப்பினும் ஒருவர் ஒரு நாளைக்கு இருபது நிமிடங்கள் மட்டுமே இலவசமாக பேச அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இலவச டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications