இளையராஜா சங்கீத அகாடமி அமைக்க இலவச நிலம்!- கேரள முதல்வர் உம்மன்சாண்டி அறிவிப்பு
1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசின் நிஷாகந்தி விருது நேற்று மாலை வழங்கப்பட்டது.
கேரள முதல்வர் உம்மன்சாண்டி இந்த விருதினை இளையராஜாவுக்கு வழங்கினார்.

கேரள சுற்றுலா துறை சார்பில் ஆண்டுதோறும், திருவனந்தபுரத்தில் நிசாகந்தி நடன, இசை விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு விழா நேற்று தொடங்கியது. விழாவுக்கு சுற்றுலா துறை அமைச்சர் ஏ.பி.அனில் குமார் தலைமை தாங்கினார்.
முதல்வர் உம்மன் சாண்டி குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். இந்த விழா வருகிற 27-ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது.
நடன, இசை விழாவை முன்னிட்டு கடந்த 4 ஆண்டுகளாக சாதனையாளர்களுக்கு கேரள அரசு சார்பில் நிஷாகந்தி விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இசை அமைப்பாளர் இளைய ராஜாவுக்கு சாதனையாளர் விருதை முதல்வர் உம்மன்சாண்டி வழங்கினார்.
விழாவில் முதல்வர் உம்மன்சாண்டி பேசுகையில், "இளையராஜாவுக்கு நிஷாகந்தி விருதை வழங்குவதன் மூலம் கேரளம் பெருமை கொள்வதுடன் புகழின் உச்சிக்கே சென்று விட்டது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்க, அரசு சார்பில் நிலம் தருவதாக கடந்த 1990-ம் ஆண்டு வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு பின் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட உள்ளது. கேரளாவில், இளையராஜா சங்கீத அகாடமி தொடங்குவதற்கு 5 ஏக்கர் நிலம் அரசு சார்பில் உடனே வழங்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன்," என்றார்.












Click it and Unblock the Notifications