ஏழை பெண்களின் திருமணத்திற்காக கேரள அரசின் 'மாங்கல்யா' லாட்டரி
திருவனந்தபுரம்: ஏழை பெண்கள் திருமணத்திற்க்காக கேரள மாநிலத்தில் புதிய லாட்டரி சீட்டை அரசு அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் லாட்டரி சீட்டு விற்பனை பல மாநிலங்களில் இன்னும் தனியாரிடம் உள்ளது. ஆனால் தமிழகத்தில் முற்றிலும் லாட்டரி சீட்டு தடைசெய்யப்பட்டது. கேரள மாநிலத்தில் மட்டும் லாட்டரி சீட்டு விற்பனையை அரசு தன் வசம் வைத்துள்ளது.
1967ம் ஆண்டு கேரளாவில் லாட்டரி சீட்டு அறிமுகம் செய்யப்பட்டது. லாட்டரி மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 680 கோடிக்கு மேல் லாபம் கிடைத்து வருகிறது. மேலும் காருண்யா என்ற பெயரில் வெளியிட்டுள்ள லாட்டரி மூலம் கிடைக்கும் பணத்தில் 22 ஆயிரம் ஏழை மக்களின் மருத்துவத்திற்க்கு அரசு உதவி செய்து வருகிறது. புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, இதயநோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ. 286 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏழை பெண்கள் திருமணத்திருக்காக "மாங்கல்யா "என்ற புதிய லாட்டரியை நேற்று கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லாட்டரி மூலம் கிடைக்கும் பணத்தில் ஏழை பெண்கள் திருமணத்திற்க்காக தலா ரூ. 30,000 நிதி உதவியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்க்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.