ஊழலை ஒழிக்க மொபைல் ஆப்களை அறிமுகம் செய்தது கேரளா !
ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளில் சாமானிய மக்களும் பங்கு கொள்ளும் வகையில், இரு மொபைல் அப்ளிகேஷன்களை (செயலிகளை) கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
திருவனந்தபுரம்: ஊழலை ஒழிக்கும் வகையிலும், மக்கள் ஊழலுக்கு எதிராக போராடும் வகையிலும் இரண்டு மொபைல் ஆப்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்துவைத்தார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் நேற்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் ஊழலுக்கு எதிரான 2 மொபைல் ஆப்களை அறிமுகம் செய்துவைத்தார்.
'அரைஸிங் கேரளா' (Arising Kerala), விசில் நவ் (Whistle Now) என்று பெயரிடப்பட்டுள்ள ஆப்களை அறிமுகம் செய்து வைத்த பினராயி விஜயன், "ஊழலற்ற மற்றும் நிலையான வளர்ச்சி என்பதே மாநில அரசின் நோக்கம். ஊழலை ஒழிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு, அரசு சாரா நிறுவனங்களில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.
மேலும், இந்த மொபைல் ஆப்கள் மூலம் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் லஞ்சம், ஊழல் தொடர்பான வீடியோக்கள், ஆடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியும். கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இவற்றை டவுன்லோடு செய்து கொள்ளலாம். ஊழலை ஒழிப்பது தொடர்பான பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் கேரள மக்கள் இந்த ஆப்கள் மூலம் வழங்கலாம் என்று பினராய் விஜயன் கூறினார்.