சொந்தக்காரருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்த குற்றச்சாட்டு.. கேரள அமைச்சர் ஜெயராஜன் ராஜினாமா
திருவனந்தபுரம்: உறவினருக்கு அரசு வேலை பெற்றுத் தந்த குற்றத்திற்காக, கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்; ராஜினாமாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கீகரித்துள்ளது.
உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசிடமிருந்து, 6 மாதங்கள் முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஆட்சியை கைப்பற்றியது மார்க்சிஸ்ட் கூட்டணி. இதன்பிறகு வெளியான முதல் சர்ச்சை, பிணராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக பதவி வகித்த ஜெயராஜனை சுற்றிதான் இருந்தது.

உறவினர் ஒருவருக்கு அரசு நடத்தும் அமைப்பு ஒன்றில் உயர் பதவி வாங்கி கொடுத்தார் என்பது குற்றச்சாட்டு. அனைவரிடமும் சமமாக கடமையாற்றுவேன் என்று அளித்த உறுதிமொழிக்கு எதிராக அமைச்சர் நடந்து கொண்டார் என எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷம் வெளிப்படுத்தின.
இந்நிலையில், ஜெயராஜன், நேற்று தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகவும், அதை கட்சியின் மாநில செயற்குழு இன்று அங்கீகாரம் செய்துள்ளதாகவும், திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் பேசிய கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் அரசில் 8 அமைச்சர்களுக்கு எதிராக விஜிலன்ஸ் அதிகாரிகள், வழக்கு பதிவு செய்தபோதிலும், அவர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றும், ஆனால், மார்க்சிஸ்ட் கட்சி, அதுபோன்ற நடைமுறையை பின்பற்றாமல், நியாயமாக நடந்து கொண்டுள்ளதாகவும், கோடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
உறவினர் ஒருவருக்கு வேலை வாங்கி கொடுத்ததற்காக அமைச்சர் ஒருவரின் பதவியே பறிக்கப்பட்டுள்ள சம்பவம் கேரள அரசியலில் சூடான விவாதத்திற்கு காரணமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications