டிவி விவாதத்தின் போது மோதல்.. கல்வீச்சில் கேரளா அமைச்சர் காயம்
கொல்லம்: கேரளாவில் டிவி விவாதத்தின் போது ஏற்பட்ட மோதலில் அமைச்சர் மற்றும் வேட்பாளர் ஆகியோர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் மே 16 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி கேரளாவில் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு காங்கிரஸ் கூட்டணிக்கும், இடதுசாரி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்குப் பதிவுக்கு 2 வாரங்கள் உள்ள நிலையில், பிரசாரக் களம் சூடுபிடித்துள்ளது. இதையொட்டி வேட்பளர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சிக்கு டிவி சேனல் ஏற்பாடு செய்திருந்தது.
பொது மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த விவாத நிகழ்ச்சியில் கேரள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிபு பேபி ஜான் மற்றும் எதிர்கட்சி வேட்பாளரான இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்த விஜயன் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது விவாதத்தின் போது வாக்குவாதம் முற்றி மோதல் வெடித்தது. இதையடுத்து ஒரு தரப்பினர் டிவி சேனல் மீது கல் வீசி தாக்கினர். இந்த தாக்குதலின் போது ஒரு கல் பட்டு சிபு பேபி ஜான் கையில் காயம் ஏற்பட்டது. அதேபோல விஜயன் பிள்ளை மீது ஒரு நாற்காலி விழுந்ததில் அவரும் காயம் அடைந்தார். இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவம் சவரா தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மோதல் தொடர்பாக இரண்டு கட்சிகளின் தொண்டர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிபு பேபி ஜான் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் சவரா தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு சிபு பாபு ஜான் வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications