புட்டிங்கல் கோவில் வெடிவிபத்து: மத்திய அரசிடம் ரூ.117 கோடி நிவாரணம் கேட்கிறது கேரளா அரசு
திருவனந்தபுரம்: கொல்லத்தில் உள்ள புட்டிங்கல் தேவி வோவில் வெடி விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு ரூ.117 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும் என்று கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூர் என்னும் இடத்தில் புட்டிங்கல் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம் போல் இவ்வருடமும் வருடாந்திர திருவிழா நடந்து வந்தது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு வந்தனர்.

வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி தொடங்கியது. கடந்த 10-ம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட வாணவேடிக்கையின்போது சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடித்து சிதறி அருகில் இருந்த, கோவிலின் பொருட்கள் வைப்பு அறைகளுக்குள் விழுந்தன.
இதில் கட்டிடங்களும் விழுந்து பலத்த சேதமடைந்தன. வாணவேடிக்கையின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 108 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புட்டிங்கல் தேவி கோவில் வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நிவாரண உதவி வழங்கவும், விபத்தில் சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கவும் ரூ.117 கோடி தேவைப்படுவதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விபத்தில், ஏராளமான சொத்துக்கள் நாசமானதாகவும், ஏராளமானோர் தீக்காயம் அடைந்ததகாவும், இதில் பலர், தங்களது வாழ்நாளில் எந்த பணியுமே செய்ய முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications