மீண்டும் கலவரம் வெடிக்கலாம்.. அச்சத்தில் பெங்களூருக்கு பஸ் சேவையை நிறுத்தும் கேரளா
திருவனந்தபுரம்: காவிரி விவகாரம் குறித்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் பெங்களூரில் கலவரம் நடக்கலாம் என அஞ்சி கேரள அரசுப் பேருந்துகள் நாளையும், நாளை மறுநாளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 10 நாட்களுக்கு திறந்துவிடுமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 5ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடகா தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீரை செப்டம்பர் 20ம் தேதி வரை திறந்துவிட உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. இதையடுத்து இன்று வரை தமிழக-கர்நாடக எல்லையில் பதட்டம் நீடித்து வருகிறது.
தமிழக பேருந்துகள் கர்நாடகாவுக்குள் செல்லாமல் ஓசூரோடு நிறுத்தப்படுகின்றன. காவிரி பிரச்சனையால் கலவரம் வெடித்தபோது கேரள அரசுப் பேருந்துகள் பல பெங்களூரில் சிக்கிக் கொண்டன. இதனால் கேரள அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காவிரி விவகார வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நாளை பெங்களூரில் கலவரம் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுவதால் நாளை மற்றும் நாளை மறுநாள் பெங்களூருக்கான பேருந்து சேவையை நிறுத்துவதாக கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications