10 மாதங்களில் வெற்றிகரமான 100-வது பந்த்... அசத்தும் கடவுளின் தேசம் கேரளா
கேரளாவில் கடந்த 10 மாதங்களில் இன்று 100-வது முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கல்வி அறிவில் முதன்மை மாநிலம் என பெயரெடுத்த கேரளா பந்த் நடத்துவதில் சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த 10 மாதங்களில் 100-வது முழு அடைப்பு போராட்டத்தை இன்று எதிர்கொண்டது கேரளா.
இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம் கடவுளரின் தேசம் என அழைக்கப்படுகிறது. கல்வி அறிவில் இந்தியாவில் முதன்மை மாநிலம் என்கிற பெருமைக்குரியதும் கேரளா.
இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் முழு அடைப்புக்கும் பெயர் போன மாநிலம் கேரளா என்றாகிவிட்டது. நாட்டில் டார்ஜிலிங் பகுதிதான் எப்போது வேண்டுமானாலும் பந்த் நடக்கலாம் என்கிற அச்சத்துக்குரியது.

கேரளாவில் முழு அடைப்பு
இப்போது டார்ஜிலிங்கை ஓவர்டேக் செய்கிறது கேரளா. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் முழு அடைப்புக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அழைப்பு விடுத்தது.

எல்லைகளில் நிறுத்தம்
இதனால் கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் எல்லைகளிலேயே நிறுத்தப்படுகின்றன. நாகர்கோவில், கன்னியாகுமரியில் இருந்து செல்லும் பேருந்துகள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஜூனில்தான் அதிகம்
கடந்த 10 மாதங்களில் கேரளாவில் நடத்தப்படும் 100-வது முழு அடைப்புப் போராட்டம் இது. கேரளாவில் கடந்த ஜூன் மாதம் அதிகபட்சமாக 21 பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜூலையில் 19, ஜனவரியில் 17 முழு அடைப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

பாஜகதான் முன்னிலை
இதில் மார்க்சிஸ்ட்- பாஜக மோதல்களால் 30 முழு அடைப்புப் போராட்டங்கள் நடந்துள்ளன. அதிகபட்சமாக பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 34; மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் தலா 14 முழு அடைப்புப் போராட்டங்களை நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications