கேரளாவுக்கு டூர் போறீங்களா? மிக கனமழை பெய்யுமாம்.. இந்திய வானிலை மையம் வார்னிங்!
கேரளாவில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மும்பை, கோவா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளான கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
கேரளாவுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் கேரளாவில் மிக கனமழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. சுற்றுலா பயணிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு
நாளை ஜூலை 13 ம் தேதி முதல் பல பகுதிகளில் 14 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
60 கிமீ வேகத்தில் காற்று
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மணிக்கு, 35 முதல் 60 கி.மீ., வேகத்தில் மேற்கு நோக்கி காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை
அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்
மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படியும் இந்திய வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது. கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு மலப்புரம், கன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஷார் நிலையில்
இதன்காரணமாக பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13 முதல் அனைத்து தாலுகா கட்டுப்பாட்டு அறைகளும் உஷார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மிக கனமழை எச்சரிக்கை
ஏற்கனவே மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்திற்கும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.