நதிநீர் இணைப்பு திட்டத்தால் கேரளா பாலைவனமாகும்: பூச்சாண்டி காட்டும் சாண்டி
திருவனந்தபுரம்: நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால், கேரள நதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.
லோக்சபாவின் கேள்வி நேரத்தில் பதிலளித்து பேசிய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி, "தேசிய நதிகளை இணைத்தால் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும், மின்சார உற்பத்திக்கு வழிவகுக்கும்" என்று கூறினார்.

இது குறித்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டி சட்டசபையில் கூறியதாவது: தேசிய நதிகள் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு நடத்த நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
நதிகளை இணைப்பதன் மூலம் மாநிலத்திற்கு மாநிலம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கேரளாவில் உள்ள நதிகளை தமிழகத்துடன் இணைத்தால் அதற்கு கேரள அரசு சம்மதிக்காது. தமிழகத்துடன் கேரள நதிகளை இணைத்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும். இதனால் மண்வளம் பாதிக்கப்படும். கேரளாவில் ஓடும் ஆறுகளான பம்பா, அச்சன் கோவில் ஆறுகள் தண்ணீரின்றி வறண்டுவிடும்.
நதிகளை இணைத்தால் எதிர்காலத்தில் கேரளாவில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். கேரளாவில் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் நிலை ஏற்படும். காடுகள் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கும். நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு எதிராக, 2003ஆம் ஆண்டே கேரள சட்டசபையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications