"என்னை"க் கேட்கிறார்கள்.. அதிகாரிகளுக்கு லஞ்சம் தர காசு கொடுங்கள்.. அதிர வைத்த கேரளப் பெண்!
லஞ்சப் பணத்திற்குப் பதில் எனது உடலைக் கேட்கிறார்கள். எனக்கு லஞ்சம் தர உதவி செய்யுங்கள் என்று கோரி பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் குதித்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணவேணி.
திருவனந்தபுரம்: பெயர் கிருஷ்ணவேணி.. வயது 34. இவர் கடந்த 2 நாட்களாக கேரள தலைமைச் செயலகப் பகுதியை அலற வைத்து வருகிறார். காரணம் இவர் மேற்கொண்டுள்ள நூதனப் போராட்டம்.
அரசு ஊழியர்கள் தன்னிடம் லஞ்சமாக தனது கற்பைக் கேட்பதாகவும, முத்தம் கேட்பதாகவும், தனிமையில் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கிருஷ்ணவேணி. தன்னால் அதைத் தர முடியாது என்பதால் பொதுமக்கள் தனக்கு பிச்சை போட்டு லஞ்சப் பணத்தைக் கட்ட உதவ வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பேனரை நிறுவி போராட்டத்தில் குதித்துள்ளார் கிருஷ்ணவேணி.

Pic Courtesy: Sreekesh Raveendran Nair
திருவனந்தபுரத்தையும், கேரள அரசு ஊழியர்கள் மத்தியிலும் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய போராட்டம் என்று கேரள காவல்துறை கூறியுள்ளது.
எனக்கு நீதி வேண்டும் என்ற பேனருடன், ஒரு உண்டியலையும் வைத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார் கிருஷ்ணவேணி. அவருக்குப் பலர் பணம் கொடுத்துச் செல்கின்றனர் என்று "தி நியூஸ்மினிட்" இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.
கிருஷ்ணவேணி, சிறையின்கீழு கிராமத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் கேட்டதாகவும், அதைக் கொடுக்க முடியாததால் தனது கற்பைக் கேட்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் கிருஷ்ணவேணி. இதுகுறித்து அவர் கூறுகையில், எனது நிலம் தொடர்பான ஆவணங்களை அங்குள்ள அதிகாரிகள் திரித்து மோசடி செய்துள்ளனர். வேறு ஒருவரின் நிலத்தை நான் ஆக்கிரமித்துள்ளது போல மாற்றியுள்ளனர்.
பிரச்சினையைத் தீர்க்க என்னிடம் பணம் கேட்டனர். ஆனால் நான் தர முடியாது என்று கூறியதால் அப்படியானால் உன் கற்பைக் கொடு என்று கேட்டு மிரட்டினர். அங்குள்ள இரண்டு அதிகாரிகள்தான் என்னிடம் இப்படி நடந்து கொண்டனர். ஒருவர் என்னிடம் முத்தம் கேட்டார். இன்னொருவர் தனிமையில் என்னுடன் எனது வீட்டில் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டார் என்று கூறுகிறார் கிருஷ்ணவேணி.
அவர் டிஎஸ்பி அஜி என்பவர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அதை அஜி மறுத்துள்ளார். இதுகுறித்து அஜி கூறுகையில், இது அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய புகார். இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. விசாறணை முறையாக நடந்து வருகிறது. இது முடிந்து போன விவகாரம். இந்த வழக்கில் தற்போது மேலும் சிலரை சேர்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு நடந்து கொள்கிறார் கிருஷ்ணவேணி என்றார் அஜி.












Click it and Unblock the Notifications