6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?
உதய்பூர்: உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு வியூகங்களை வகுப்பது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மற்றும் விவாதிக்கப்படவுள்ள முக்கியமான 10 சீர்திருத்தங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
காங்கிரஸ் தலைவர் யார்..? “இப்பவே முடிவெடுங்க” - பரபரப்பைக் கிளப்ப மூத்த தலைவர்கள் திட்டம்!?
சிந்தனையாளர்கள் மாநாடு
சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, கட்சியை வலுப்படுத்தவும், தேர்தல்களை எதிர்கொள்ள வியூகம் வகுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 நாள் சிந்தனையாளர்கள் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்த மாநாட்டுக்கு 430 மூத்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட்
காங்கிரஸ் மீதுள்ள வாரிசு அரசியல் விமர்சனத்தைப் போக்க, ஒரு குடும்பத்தில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் "ஒரு குடும்பத்திற்கு ஒரு சீட்" என ரூல்ஸ் கொண்டுவர இந்த மாநாட்டில் பரிந்துரைக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆனால், சோனியா காந்தி மற்றும் அவரது வாரிசுகளான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு இந்தக் கட்டுப்பாடு இருக்காது எனக் கூறப்படுகிறது.
சோனியா குடும்பத்திற்கு விலக்கு
அதேநேரம் மூத்த உறுப்பினர்களும், அவர்தம் வாரிசுகளும் போட்டியிட விரும்பினால், அவர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் கட்சியில் செயலாற்றியிருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் கூறியுள்ளார். சோனியா காந்தி குடும்பத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, "சோனியா காந்தியின் வாரிசுகள் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே காங்கிரஸுக்காக பணியாற்றி வருகின்றனர். பிரியங்கா காந்தி 2018 முதல் கட்சிக்காக முறையாக பணியாற்றத் தொடங்கினார் என்றும் கூறியுள்ளார்.
அதிருப்தி
கட்சியை வலுவாகக் கட்டமைக்க வேண்டுமானால், தலைமை முதல் தொண்டன் வரை ஒரே மாதிரியான விதி வேண்டும். காங்கிரஸ் தலைவரின் வாரிசுகளுக்காக மட்டும் விதியைத் தளர்த்துவது சிக்கலைத்தான் ஏற்படுத்தும். இது கட்சியின் கட்டமைப்பின் மீது தொண்டர்கள் அதிருப்தி அடைவதற்கு வழிவகுக்கும் என்றும், கட்சிக் கட்டுப்பாடு குலையும் என்றும் விமர்சிக்கப்படுகிறது.
50 வயதுக்கு குறைவாக
தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் திட்டமிட்டும் கட்சிக் கட்டமைப்பு முயற்சிகளுக்கு மத்தியில், ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்தும் அக்கட்சி விவாதித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சியில் குறைந்தபட்சம் சரிபாதி பதவிகளில் 50 வயதுக்கு குறைவான தலைவர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என்பது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
5 ஆண்டுகளுக்கு மேலாக
காங்கிரஸ் கட்சியில் எந்தவொரு நபரும் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவியில் இருக்கக்கூடாது எனவும் காங்கிரஸில் திட்டவட்டமான விதி உருவாக்கப்படும் என அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல்களில் போட்டியிட சீட் வழங்குவதிலும் வயது வரம்பைக் கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால், இதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருக்கலாம் என்பதால் நிறைவேற வாய்ப்புக் குறைவே.
இளைஞர்களுக்கு வாய்ப்பு
ராகுல் காந்தியின் ஆதரவாளரான விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் அண்மையில் கூறுகையில், இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவீதம் பேர் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பதால், அனைத்து கட்சிப் பதவிகளிலும் இளைஞர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இதுதொடர்பான கோரிக்கைகளை இந்த மாநாட்டில் எழுப்பக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் வியூகம்
வரவிருக்கும் சட்டசபை தேர்தல்கள், 2024ல் நடைபெறும் மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்வது குறித்தும், செயல்படுத்தப்பட வேண்டிய வியூகங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள், ஆலோசனைகள் தொடர்பாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு சோனியா காந்தியிடம் சமர்ப்பிக்கப்படும் அதைத் தொடர்ந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஆறு முக்கிய குழுக்கள்
நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை, சமூக நீதி, விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்ட துறைகளில் 6 குழுக்கள் ஏற்படுத்தப்படும். ஒவ்வொரு குழுவிலும் 60 முதல் 70 பேர் இருப்பார்கள். அவர்கள் அந்தந்த குழுக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள். மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வர இந்தத் திட்டம் பெரிதும் பயனளிக்கும் என காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தி
மேலும், இந்த மாநாட்டில் ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிப்பதற்கு மூத்த தலைவர்கள் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டின் இறுதி நாளில் இந்த முன்மொழிவைச் செய்ய தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சிந்தனையாளர்கள் மாநாட்டின் இறுதி நாளில் ராகுல் காந்தி உரையாற்றுவார் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸில் ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.