இந்து தலைவர்களை கொல்ல லஷ்கர்-இ-தொய்பாவுடன் கை கோர்த்த சீக்கிய தீவிரவாதிகள்.. ஐ.பி. வார்னிங்
டெல்லி: சீக்கிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர், இணைந்து, இந்தியாவிலுள்ள இந்து அமைப்புகளின் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதன்மூலம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல்களில் குழப்பத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் இந்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஆர்எஸ்எஸ் மற்றும் விஹெச்பி தலைவர்கள்தான் தீவிரவாதிகளின் குறி எனவும் ஐ.பி வார்னிங் கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் வைத்து இந்த பயங்கரவாத திட்டங்களுக்கு ஸ்கெட்ச் போடப்பட்டுள்ளது.
சீக்கிய தீவிரவாதிகள் இந்து தலைவர்களை கொலை செய்தால், அப்போது இந்துக்கள் பதிலுக்கு சீக்கியர்களை தாக்க வாய்ப்புள்ளது. இதனால், பஞ்சாப் தேர்தலின்போது பாஜகவுக்கு எதிராக சீக்கியர்கள் ஒன்றிணைவார்கள் என்பது தீவிரவாதிகள் திட்டம்.
லஷ்கர்-இ-தொய்பாவின் நோக்கம் என்பது இந்து-முஸ்லிம் மக்களிடையே கலவரம் ஏற்படுத்துவது என கூறுகிறது உளவுத்துறை. எனவே, இந்து தலைவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என்று உளவுத்துறை தெரிவித்துள்ளது.