லாலா லஜபதிராய் சிலைக்கு பாஜக துண்டு: சர்ச்சையில் சிக்கினார் கிரண்பேடி
டெல்லி: சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் சிலைக்கு பா.ஜ.க. சின்னம் பொறித்த துண்டு அணிவித்ததன் மூலம் கிரண்பேடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி டெல்லி சட்டசபை தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். கிரண்பேடியை அறிவித்த பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராகவும் கிரண்பேடி அறிவிக்கப்பட்டுள்ளார்.
கிரண்பேடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக ஊர்வலமாக சென்றார். தான் போட்டியிடும் கிருஷ்ணா நகர் தொகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் சிலைக்கு மாலை அணிவித்தார். அதோடு பா.ஜ.க. சின்னம் பொறித்த துண்டு ஒன்றினையும் லாலா லஜபதி ராயின் சிலைக்கு அணிவித்தார்.
கண்டனக்குரல்
கிரண்பேடியின் இந்த செயலுக்கு காங்கிரஸ் மற்றும் ஆத் ஆத்மி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அக்கட்சியின் டெல்லி முதல்வர் வேட்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''சுதந்திர போராட்ட வீரர்கள் எந்த கட்சியையும் சாராதவர்கள். அவர்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களை பா.ஜ.க.விற்கோ, காங்கிரசுக்கோ அல்லது மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றோ பிரிப்பது சரியில்லை.
ஆனால், கிரண்பேடி சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மதச் சாயம் பூச முயற்சிக்கிறார். இது சுதந்திர போராட்ட வீரர்களை அவமதிக்கும் செயலாகும். அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிட்டாலும், அவமதிக்காமல் இருக்கலாம்'' என்றார்.
பேச்சிலும் சர்ச்சை
இதற்கிடையே, ஆர்.எஸ்.எஸ். ஒரு தேசியவாத அமைப்பு எனவும், இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு மிக முக்கியமானது என கிரண்பேடி பேசியதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.