மோடியை சந்தித்து நாராயணசாமி குறித்து கோள் மூட்டிய கிரண் பேடி!
பிரதமர் மோடியை புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இன்று சந்தித்தார். அப்போது புதுவை முதல்வர் நாராயணசாமி குறித்து புகார் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி: புதுவை அரசின் செயல்பாட்டில் தொடர்ந்து தலையீடு செய்து வரும் அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பிரதமர் மோடியை இன்று சந்தித்து முதல்வர் நாராயணசாமி மீது புகார் தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி முதல்வராகக் கொண்டு காங்கிரஸ் கட்சி புதுவையில் ஆட்சி செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து தலையிட்டு வருகிறார்.
யூனியன் பிரதேசத்தில் யாருக்கு அதிகாரம் அதிகம் என்பது குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்து வரும் நிலையில், மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் புதுவையில் செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியின் அரசு நிர்வாகத்தில் ஆளுநர் கிரண் பேடி தேவையற்ற முறைகளில் தலையீடு செய்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் புதுவை முதல்வர் நாராயணசாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, டெல்லி சென்ற கிரண் பேடி, பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் நாராயணசாமி பற்றியும் புதுவையில் நடக்கும் பிரச்சனை குறித்தும் கிரண் பேடி விரிவாக மோடியிடம் கூறியுள்ளார்.