கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள்... டெல்லி தோல்விக்கு நானே பொறுப்பு: கிரண்பேடி
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜகவின் தோல்விக்கு தானே காரணம் எனத் தெரிவித்துள்ளார் பாஜக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கிரண்பேடி. இதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்கும் அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதலே ஆம் ஆத்மியின் கை ஓங்கியே உள்ளது. பாஜகவின் தோல்வி நிச்சயமாகி விட்டது.

இந்நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து பாஜகவின் முதல்வர் வேட்பாளரான கிரண்பேடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ‘டெல்லி தேர்தல் முடிவுக்கு நானே பொறுப்பு. இந்த தேர்தல் முடிவுகள் மோடி அரசு மீதான மதிப்பீடாக கருத முடியாது. நானும், கெஜ்ரிவாலும் எதிரெதிர் அணிகளில் போட்டியிட்டோம். விளையாட்டில் எப்படி ஒருவர் மட்டுமே ஜெயிக்க முடியுமோ, அதே போல் தான் இதுவும்.
பாஜக வெற்றி பெற்றால் அது, தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அனைவரையும் சேரும். ஆனால், தோல்வி ஏற்பட்டால் அதற்கு நான் மட்டுமே பொறுப்பு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
மேலும், அதிக இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள ஆம் ஆத்மிக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முழு மதிப்பெண்கள். வாழ்த்துக்கள். டெல்லியை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கிரண்பேடி இருவருமே காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications