"எவ்ளோ காஸ்ட்லி மாத்திரை"... 227 கிராம் தங்கத்தை மாத்திரைக்குள் மறைத்து விழுங்கி கடத்தியவர் கைது!
கொல்கத்தா: சுமார் 227 கிராம் அளவுள்ள தங்கத்தை 9 மாத்திரைகளுக்குள் மறைத்துப் பதுக்கி வயிற்றில் வைத்துக் கடத்தி வந்த பயணி, கொல்கத்தா விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் பிடிபட்டார்.
கொல்கத்தாவில் உள்ள என்.எஸ்.சி.பி. இண்டர்நேஷனல் விமான நிலையத்திற்கு கோலாலம்பூர் விமானத்திலிருந்து வந்திறங்கிய பயணி ஒருவரின் நடத்தையில் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பயணியை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது அவரிடம் ஏதும் சிக்கவில்லை.

இருந்தாலும் சந்தேகம் போகவில்லை. அவரைத் துருவித் துருவி விசாரித்தனர். இதில், அவர் விமானம் ஏறுவதற்கு முன்னதாக ஒன்பது மாத்திரைகளை விழுங்கியதை ஒப்புக் கொண்டார். மேலும் அந்த மாத்திரைகளில் 227.3 கிராம் தங்கம் சிறு சிறு உருண்டைகளாக மாற்றப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் உதவியோடு அவர் வயிற்றில் இருந்த தங்கம் வெளியே எடுக்கப்பட்டது. மீட்கப்பட்ட தங்கத்தில் மதிப்பு ரூ. 5.8 லட்சம் என அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்த மதிப்பானது சட்டவிரோதமானது அல்ல எனக் கருதிய போலீசார், தங்கம் கடத்தியதாக பிடிபட்ட பயணியை விடுதலை செய்தனர். வயிற்றில் தங்கம் கடத்திய பயணி சென்னையைச் சேர்ந்தவர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று, மலக்குடலில் ரூ. 16 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் கடத்திய வேறொரு பயணியை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications