மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலாப்பூரில் வசித்த காலம் அது.. 2014ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.. அப்போது என் நண்பர் ஒருவரின் தந்தை தினமும் மயிலாப்பூரில் இருந்து அம்பத்தூருக்கு சைக்கிளில் அலுவலகம் சென்று வருவார்..அவரிடம் ஏன் இப்படி தினமும் சைக்கிளில் போறீங்க என்று கேட்டேன்.. அத்துடன் நேரம் ஆகுமே என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் திகைப்படைய வைத்தது. ஒரு மணி நேரத்தில் போய்விடுவேன் என்பார்.. அவருக்கு சொந்தமாக கார் இருக்கிறது. இருசக்கர வாகனமும் இருக்கிறது. இன்று வரை சைக்கிளில் செல்கிறார்.. அவருக்கு சர்க்கரை இல்லை. நல்ல சேமிப்பாளர்..சூப்பராக வாழ்கிறார்.. இன்று இதனை சொல்ல காரணம் இன்று உலக சைக்கிள் தினம்..

சென்னையில் முன்னாள் டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு அடிக்கடி சைக்கிளிங் செல்வார்.. தன்னைப்போலவே சைக்கிளிங் செல்பவர்களை ஊக்குவிப்பார். பலர் சைக்கிளிங் செல்வதை பேசுபொருளாக அப்போது எல்லாம் அடிக்கடி கேட்டதுண்டு. மகாபலிபுரம் சாலையில் கடற்கரையை ஒட்டிய பகுதியில் சூரியன் உதயம் ஆகும் நேரத்தில், பட்டாம் பூச்சிகளை போல பலர் சைக்கிளில் பறந்து செல்வார்கள். அப்படி பறந்து செல்பவர்களின் இலக்கு மகாபலிபுரமாக இருக்கும். ஈசிஆர் சாலைகளில் இன்றும் கூட பலர் சைக்கிளிங் செல்வதை காண முடியும்.

Mylapore to Ambattur on a Cycle Despite Owning a Car An Inspiring Story This World Bicycle Day

நெதர்லாந்து, நார்வே, ஜெர்மனி, சுவீடன் போன்ற வளர்ந்த நாடுகளில் சைக்கிளிங் செல்வதையே மக்கள் விரும்புகிறார்கள்.இதில் நெதர்லாந்தை உலகிலேயே சைக்கிள் ஓட்டுபவர்களின் சொர்க்கம் என்று சொல்லலாம். இங்குள்ள மக்கள் தொகையை விட அங்குள்ள சைக்கிள்களின் எண்ணிக்கை அதிகம். இந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 99% பேரிடம் சைக்கிள் உள்ளது.

இங்கு கார்களுக்கு இணையாக, தனித்தனியான அகலமான சைக்கிள் சாலைகள் மற்றும் சைக்கிள்களுக்கு என்றே பிரத்யேக டிராஃபிக் சிக்னல்கள் உள்ளன. நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் மக்கள் வேலைக்குச் செல்லவும், பள்ளிக்குச் செல்லவும் காரை விட சைக்கிளையே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏன் நெதர்லாந்து பணக்கார நாடாக இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு விஷயமே போதும். ஏனெனில் எரிபொருள் செலவு மிகவும் குறைந்துவிடும். மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு, அதுவும் மிகவும் அவசியம் என்றால் மட்டுமே காரை பயன்படுத்துவார்கள். சைக்கிளில் செல்வதால் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்கிறது. புத்துணர்ச்சியாகவே இருக்கிறார்கள்.

நெதர்லாந்திற்கு அடுத்தபடியாக சைக்கிள் பயன்பாட்டில் உலகப் புகழ்பெற்ற நாடு டென்மார்க் . தலைநகர் கோபன்ஹேகனில் வசிக்கும் மக்களில் 60%-க்கும் அதிகமானோர் தங்களின் அன்றாட வேலை மற்றும் கல்விக்காக சைக்கிளையே பயன்படுத்துகிறார்கள். 'சைக்கிள் சூப்பர் ஹைவேஸ்' என்ற பெயரில் நகரங்களையும் புறநகர்ப் பகுதிகளையும் இணைக்கும் அதிவேக சைக்கிள் பாதைகளை இந்நாடு உருவாக்கியுள்ளது.

நார்வேயின் அண்டை நாடான சுவீடனிலும் சைக்கிள் கலாச்சாரம் மிக அதிகம். இந்நாட்டு மக்கள் உடற்பயிற்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். குளிர்காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது கூட, பனியை விலக்கும் சிறப்பு வாகனங்கள் மூலம் சைக்கிள் பாதைகளைத் தூய்மைப்படுத்தி, மக்கள் சைக்கிள் ஓட்டுவதை அரசு உறுதி செய்கிறது. ஐரோப்பா மட்டுமல்ல ஜப்பானில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் வீட்டின் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்குச் செல்ல சைக்கிள்களைப் பயன்படுத்துகின்றனர் . ஜப்பானில் இடப்பற்றாக்குறை அதிகம் என்பதால், ரயில் நிலையங்களின் அடியில் அதிநவீன 'தானியங்கி நிலத்தடி சைக்கிள் பார்க்கிங்' வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பட்டனை அழுத்தினால் சைக்கிள் தானாக பூமிக்கு அடியில் சென்று பார்க்கிங் ஆகிவிடும். இப்படி பல்வேறு நாடுகள் சைக்கிளிங்கை ஊக்குவிக்க காரணம் இருக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சைக்கிள் ஓட்டுதல் மிகச்சிறந்த தேர்வாக இருப்பதே காரணம். பல்வேறு நாடுகள் சாலைச் சந்திப்புகளில் கார்களை விட சைக்கிள் ஓட்டுபவர்களுக்கே முதலாவது செல்லும் உரிமை சட்டப்படி வழங்கப்படுகிறது. பல ஐரோப்பிய நாடுகளில் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் சைக்கிளில் வேலைக்கு வந்தால், அவர்களுக்குக் கூடுதல் ஊக்கத்தொகை வழங்குகின்றன.

சைக்கிளிங்கை பற்றி உலக வரலாறு எல்லாம் சொல்ல காரணம் இல்லாமல் இல்லை.. உலக சைக்கிள் தினமான இன்று அதனை பதிவு செய்ய காரணம். மக்களுக்கு சைக்கிளிங் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது தான்.. சென்னையில் சைக்கிளில் செல்வதை பலர் ஏளனமாக பார்க்கிறார்கள். ஆனால் அது பொருளாதார ரீதியாகவும் உடல் நலன் ரீதியாகவும் பாதுகாப்பானது.. அதேபோல் அதிகாலையில் சென்னையின் சாலைகளில் சைக்கிள் ஓட்டுவது உடல் நலத்திற்கு மட்டுமின்றி, மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும். சைக்கிளில் வேலைக்கு செல்ல முடியாவிட்டாலும், தினமும் சைக்கிள் ஓட்டினால், நிச்சயம் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

சென்னையில் சைக்கிள் ஓட்டுவதற்கு உகந்த சிறந்த வழித்தடங்களை இந்த பதிவில் பார்ப்போம்.

மகாபலிபுரம் சாலை (ஈசிஆர் சாலை)

சைக்கிள் பிரியர்களின் சொர்க்கம் என்று ஈசிஆர் சாலையை சொல்லலாம். திருவான்மியூரில் தொடங்கி நீலாங்கரை, பனையூர், அக்கரை, கோவளம் மற்றும் மகாபலிபுரம் வரை செல்லும் இந்தச் சாலையில், அதிகாலையில் குளிர்ந்த கடல் காற்றுடன், இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் சைக்கிள் ஓட்டுவது தனித்துவமான அனுபவம். நீண்ட தூரம் சைக்கிள் ஓட்டப் பழகுபவர்களுக்கு இது மிகச்சிறந்த வழித்தடம் ஆகும்.

பெசன்ட் நகர் (எலியட்ஸ் கடற்கரை)

குறுகிய தூரம் மற்றும் நிதானமாக சைக்கிள் ஓட்ட விரும்புபவர்களுக்கு பெசன்ட் நகர் கடற்கரைச் சாலைகள் ஏற்றதாகும். அகலமான சாலைகள், நிழல் தரும் மரங்கள் மற்றும் அலைகளின் ஓசையோடு அதிகாலையில் இங்கு சைக்கிள் ஓட்டுவது மனதை அமைதிப்படுத்தும். வார இறுதி நாட்களில் இங்கு சைக்கிள் ஓட்டுபவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

காமராஜர் சாலை (மெரினா கடற்கரை)

சென்னை மெரினாவில் லைட் ஹவுஸ் முதல் நேப்பியர் பாலம் வரை உள்ள இந்தச் சாலை, மிக அகலமான மற்றும் தட்டையான சாலையாகும். ஆரம்பக்கட்ட சைக்கிள் ஓட்டிகளுக்கு இது மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிதான வழித்தடம் ஆகும். அதேபோல் வட சென்னைப் பகுதியில் உள்ளவர்கள் மற்றும் சவாலான நீண்ட தூரப் பயணத்தை விரும்புபவர்கள் எண்ணூர் விரைவுச்சாலையைப் பயன்படுத்துகின்றனர்.

சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள்

தினமும் அல்லது வாரத்தில் சில நாட்கள் சைக்கிள் ஓட்டுவதால் பல நன்மைகள் கிடைக்கும். சைக்கிள் ஓட்டுவது ஒரு சிறந்த கார்டியோ உடற்பயிற்சி ஆகும். இது இதயத் துடிப்பைச் சீராக்கி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்கவும், தசை வலிமையை அதிகரிக்கவும் உதவுகிறது.
அதிகாலைச் சூழலில் சைக்கிள் ஓட்டும்போது மூளையில் 'எண்டோர்பின்' போன்ற மகிழ்ச்சியான ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது அன்றாட மன அழுத்தத்தைக் குறைத்து, தூக்கமின்மைப் பிரச்சினையைச் சரிசெய்யும்.

சைக்கிள் பயன்படுத்துவதால் கார்பன் உமிழ்வு பூஜ்ஜியமாகிறது. காற்று மாசுபாடு மற்றும் சத்தமில்லாத நகரை உருவாக்க இது பெரிதும் உதவுகிறது. எரிபொருள் (பெட்ரோல்/டீசல்) செலவு மிச்சமாவதுடன், வாகனப் பராமரிப்புச் செலவும் குறைகிறது.

சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் சைக்கிள் கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், சைக்கிள் ஓட்டுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வந்திருக்கிறது. உதாரணமாக சென்னை 'சிங்காரச் சென்னை 2.0' திட்டத்தின் கீழ், கே.கே. நகர், அண்ணா நகர் மற்றும் பெசன்ட் நகர் போன்ற பகுதிகளில் சாதாரணப் போக்குவரத்தில் இருந்து பிரிக்கப்பட்ட பிரத்யேக சைக்கிள் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்மார்ட் பைக் பகிர்வுத் திட்டம்

பொதுமக்கள் எளிய முறையில் சைக்கிள்களைப் பயன்படுத்த ஏதுவாக, மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடற்கரை ஓரங்களில் 'ஸ்மார்ட் பைக்' நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொபைல் ஆப் மூலம் மிகக் குறைந்த வாடகையில் இந்த சைக்கிள்களைப் பயன்படுத்த முடியும். பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைச் சாலை போன்ற முக்கிய இடங்களில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நேரங்களில் மோட்டார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, பொதுமக்கள் சுதந்திரமாக சைக்கிள் ஓட்டவும், விளையாடவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் நட்புப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக, சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகள் தங்களது மடிக்கக்கூடிய சைக்கிள்களை எவ்விதக் கட்டணமும் இன்றி எடுத்துச் செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.

சைக்கிளிங் என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மாசற்ற எதிர்காலத்திற்கான ஒரு முதலீடு. மது என்பது வீட்டிற்கு, நாட்டிற்கு கேடு என்பார்கள். அதனை அப்படியே சைக்கிளில் பார்த்தால், சைக்கிள் வீட்டிற்கும், நாட்டிற்கும் நன்மை.. ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது தான். அதனை மீண்டும் நாம் பயன்படுத்த தொடங்கினால், அதாவது எண்ணெய் போட்டு சுத்தம் செய்து, அதனை பயன்படுத்தினால், நமக்கு உடல் நலமும், பொருளாதாரமும் நிச்சயமாக உயரும். பலரும் சைக்கிளில் செல்ல தொடங்கினால், அரசுக்கும் நிறைய பணம் அன்னிய செலவாணியாக செல்வதும் குறைந்துவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+