மமதா எதிர்ப்பு, உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் ஒருவழியாக.. கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சிபிஐ விசாரணை
கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடி தொடர்பான வழக்கில், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் இன்று சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
கொல்கத்தா போலீஸ் கமிஷனராக பணியாற்றுபவர் ராஜீவ் குமார். இவருக்கு சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கில் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிபிஐ சமீபத்தில், ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த கொல்கத்தா சென்றது. ஆனால் இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து, சிபிஐ அதிகாரிகளையே காவல்துறையை வைத்து விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்தார்.

இதையடுத்து, சிபிஐக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கொல்கத்தாவில் தர்ணா நடத்தினார். இதனிடையே சிபிஐ உச்சநீதிமன்றத்தை நாடியது. விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், ராஜீவ்குமார், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், ஆனால் அவரை கைது செய்ய கூடாது என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து ராஜீவ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். ஷில்லாங் நகரிலுள்ள சிபிஐ அலுவலகத்தில், விசாரணை காலை 11.30 மணியளவில் ஆரம்பித்துள்ளது.
ராஜீவ்குமாருடன், துணை போலீஷ் கமிஷனர் முரளிதர் ஷர்மா உள்ளிட்ட 3 உயர் போலீஸ் அதிகாரிகளும் சென்றனர். ராஜீவ் குமாரிடம் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு பக்கம் போராட்டம் நடத்தி கோஷமிட்டனர்.












Click it and Unblock the Notifications