தித்திக்கும் ‘பலா’... திகட்டாத உணவுகள்... கேரளாவில் நடந்த ‘பலாப்பழ திருவிழா’!
திருவனந்தபுரம்: கேரளாவில் ‘குடும்பஸ்ரீ' அமைப்பின் சார்பில் பலாப்பழ திருவிழா நடைபெற்றது. இதில், பலாப் பழத்தினால் செய்யப்பட்ட விதவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன.
கேரள மாநிலத்தில் ‘குடும்பஸ்ரீ' என்ற பெண்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் ஏராளமான பெண்கள் உறுப்பினர்களாக இணைந்து செயலாற்றி வருகிறார்கள். பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், பெண்கள் தன்னம்பிக்கையுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் இந்த அமைப்பு உதவி செய்து வருகிறது.

"குடும்பஸ்ரீ' என்பதற்கு குடும்பத்தில் செல்வம் பெருகுவது என்று பொருளாகும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களை அதிகாரம் பெறச் செய்யும் நோக்கத்துடன் 1998-ம் ஆண்டு கேரள அரசு இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தது.
இந்நிலையில், இந்தக் குடும்பஸ்ரீ அமைப்பு பலாப்பழங்களைக் கொண்டு விதவிதமாக உணவுப் பொருட்களை தயாரித்து ‘பலாப் பழ திருவிழா' ஒன்றை நடத்தியது.
இதில், ஏராளமான பெண்கள், பலாப்பழத்தைக் கொண்டு சிப்ஸ், ஜூஸ் உள்ளிட்ட பல உணவுப் பொருட்களைச் சமைத்து அசத்தினர். பலாப்பழத்தின் தேவை மற்றும் சுவையை மேலும் அதிகரிப்பதற்காக இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒரே இடத்தில் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழத்தில் தயாரிக்கப் பட்ட பல உணவுப் பொருட்கள் கிடைத்ததால், மக்கள் ஆர்வமுடன் இதில் பங்கேற்று, உணவுப் பொருட்களை ருசித்தனர்.












Click it and Unblock the Notifications