பிரியங்கா காந்தி என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்: குமார் விஷ்வாஸ்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குமார் விஷ்வாஸ் தன்னை பிரியங்கா காந்தி கொலை செய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் குமார் விஷ்வாஸ் போட்டியிடுகிறார். ராகுலின் தொகுதியான அமேதியில் விஷ்வாஸ் காங்கிரஸ் அரசின் ஊழல்களை எடுத்துரைத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
ராகுல்-பிரியங்காவுக்கு நெருக்கமான ஒருவர் என்னை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். அந்த நபரை பிரியங்கா தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கு ஆதாரமாக ஒரு வீடியோவையும் விஷ்வாஸ் போஸ்ட் செய்துள்ளார். அந்த வீடியோவில் காரில் செல்லும் பிரியங்காவிடம் ஒரு நபர் நான் குமார் விஷ்வாஸை சுட்டுக் கொன்றுவிடுகிறேன் என்கிறார். அதற்கு பிரியங்கா அந்த நபரிடம் அப்படி எல்லாம் கூறாதீர்கள், என் கெஸ்ட் ஹவுஸுக்கு வாருங்கள் என்கிறார்.