விஜயா ரெட்டியை காப்பாற்ற போய் கருகி டிரைவர் மரணம்.. மனைவி 8 மாத கர்ப்பிணியாம்!
தாசில்தாரை காப்பாற்ற சென்ற டிரைவரும் உடல் கருகி உயிரிழந்தார்
Recommended Video
அப்துல்லாபூர்மெட், ரங்காரெட்டி, தெலங்கானா: தீயில் கருகிய தாசில்தார் விஜயாவை காப்பாற்ற போன டிரைவர் குருநாத்தும் இப்போது உயிரிழந்துள்ளார்.. இவரது மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், குருநாத்தின் மரணம் தெலங்கானா மக்களை புரட்டி போட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லாபூர்மெட் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பெண் தாசில்தார் விஜயா ரெட்டி என்பவரை உயிரோடு தீவைத்து எரித்து விட்டார் சுரேஷ் என்ற விவசாயி. நில ஆவணத்தில் தவறு இருந்ததாகவும், அதை சரி செய்யாமல் தாலுகா அலுவலகம் தாமதம் செய்ததாகவும், அதனால்தான் சுரேஷ் கோபத்தில் விஜயாவை தீ வைத்து கொளுத்தி கொன்றுள்ளதாக கூறப்படுகிறது.
அறைக்குள் பேசிக் கொண்டிருந்த சுரேஷ், திடீரென பெட்ரோலை விஜயா மீது ஊற்றவும், உடலில் நெருப்பு பற்றிக் கொண்டு வெளியே ஓடிவந்தார் விஜயா. அங்கிருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
"என்னை காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. நான்தான் விஜயா.." என்று கதறி உள்ளார். அப்போதுதான் பியூன் சந்திரையன், டிரைவர் குருநாதம் இருவரும் ஓடிச்சென்று விஜயாவை காப்பாற்ற முயன்றனர். ஆனால், அங்கேயே கரிக்கட்டையாக விழுந்து இறந்துவிட்டார் விஜயா. காப்பாற்ற சென்ற இருவருக்கும் தீக்காயம் பலமாக ஏற்பட்டது.
அதிலும் டிரைவர் குருநாத்துக்கு 80 சதவிகித தீக்காயம் ஏற்பட்டு இருந்தது. ஆஸ்பத்திரியில் தீவிரமாக சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியாத நிலையில், இன்று அவரும் உயிரிழந்தார். குருநாத்துக்கு 27 வயதாகிறது.. ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், இவரது மனைவி இப்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
தாசில்தார் உயிரைக் காப்பாற்றப் போய் தனது உயிரை தியாகம் செய்துள்ளார் குருநாதம். அவரது கர்ப்பிணி மனைவியின் நிலையை நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள் ரங்காரெட்டி மாவட்ட மக்கள்! இதற்கிடையே, இவ்வவளவு மோசமான செயலில் ஈடுபட்ட சுரேஷும் தற்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு 60 சதவீத அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications