ஆமா, நீங்க எதற்கு லலித் மோடியை சந்தித்தீர்கள்?: மும்பை போலீஸ் கமிஷனரிடம் விளக்கம் கேட்கும் 'சி.எம்.'
மும்பை: ஐபிஎல் மோசடியில் சிக்கி நாட்டை விட்டு வெளியேறிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியை லண்டனில் சந்தித்து பேசியது குறித்து மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவிடம் மகாராஷ்டிரா முதல்வர் விளக்கம் கேட்டுள்ளார்.
ஐபிஎல் மோசடி புகாரில் சிக்கிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் வசித்து வருகிறார். மோசடி புகாரில் சிக்கிய அவருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜி ஆகியோர் உதவி செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு லண்டனில் லலித் மோடியை சந்தித்து பேசியதாக மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மோடி என்னை பார்க்க விரும்புவதாக அவரின் வழக்கறிஞர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். நிழல் உலக ஆட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு லலித் மோடி அடிக்கடி வலியுறுத்தி வந்தார் என்றார்.
இது பற்றி மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மரியா லலித் மோடியை சந்தித்து பேசியது பற்றி அவரிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அவர் விளக்கத்தை பெற்ற பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.