சுஷ்மா, ராஜே பதவி விலகமாட்டார்கள்- இது யு.பி.ஏ. அல்ல என்.டி.ஏ. ஆட்சி: ராஜ்நாத் சிங்
டெல்லி: லலித் மோடி விவகாரத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே பதவி விலக மாட்டார்கள். இது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடிக்கு உதவிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
இல்லை, இல்லை, எந்த அமைச்சரும் பதவி விலக மாட்டார்கள். இது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அல்ல என்றார்.
சுஷ்மாவும், வசுந்தராவும் பதவி விலகாவிட்டால் நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடரை நடத்த விட மாட்டோம் என காங்கிரஸ் எச்சரித்துள்ளதே என்று மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்கள் செய்ததை எங்கள் அமைச்சர் செய்ய மாட்டார்கள் என்றார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்கள் பலர் ஊழல் புகாரில் சிக்கியதை அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.