சுஷ்மா விவகாரம்: சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க காங். கோரிக்கை
டெல்லி: லலித் மோடிக்கு சுஷ்மா ஸ்வராஜ் உதவிய விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
ஊழல் மற்றும் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி மனைவியின் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்காக போர்ச்சுகல் நாட்டுக்கு செல்ல லலித் மோடி இங்கிலாந்து தூதரகம் மூலம் விசா பெறுவதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரத்தில் தான் மனிதாபிமான அடிப்படையில் தான் உதவி செய்ததாக சுஷ்மா ஸ்வராஜூம் ஒப்புக் கொண்டார். ஆனால் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் போலீசாரால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளிக்கு ஒரு மத்திய அமைச்சர் எப்படி உதவி செய்யலாம்? என்று கேள்வி எழுப்பி அவர் பதவி விலகவேண்டும் என போர்க்கொடி உயர்த்தி உள்ளன.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியதாவது:
வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித்மோடி விசா பெறுவதற்கு உதவி செய்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்படவேண்டும். அப்போதுதான் மோடி அரசுக்கும், லலித்மோடிக்கும் இடையே தொடர்பு குறித்து முழுமையாக வெளிச்சத்துக்கு வரும்.
இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வெளிப்படையாக பேசவேண்டும். நாட்டு மக்களுக்கு பதில் அளிக்கவேண்டும். இதில் மோடி மவுனமாக இருப்பது அவர் மீது சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.
தனக்கு இதில் உள்ள தொடர்பு குறித்து மோடி விளக்கம் அளிக்கவேண்டும். அதுவும் தலைமறைவாக உள்ள ஒருவருக்கு பயண ஆவணங்கள் பெற்றுத் தந்திருப்பது எல்லையை மீறிய பொறுப்பற்ற செயல். ஏனெனில் பல்வேறு சட்டவிரோதமான பிரச்சினைகளும் இதில் இணைந்து இருக்கின்றன.
We demand a thorough investigation in this affair not restricted to travel docs, under the supervision of Supreme Court: Shri Anand Sharma
— INC India (@INCIndia) June 16, 2015
தனது மனைவி போர்ச்சுகலில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று லலித்மோடி கூறியதால் பயண ஆவணங்கள் பெற்றுத் தர உதவியதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறுவதை ஏற்க இயலாது. ஏனென்றால் லலித் மோடி விடுமுறை நாட்களை பிறநாடுகளில் மனைவியுடன் கழித்து இருக்கிறார்.
அதே நேரம் தனது பாஸ்போர்ட்டை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்டு லலித்மோடி தொடர்நத வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அதை மத்திய அரசு எதிர்க்கவில்லை. எனவே இதில் சுஷ்மா ஸ்வராஜூக்கு மட்டும் அல்ல, அவரை பாதுகாப்பதில் இன்னும் உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் பங்கு இருக்கிறது. சட்டவிரோத பணபரிவர்த்தனை, அன்னிய செலாவணி சட்ட விதிமுறை மீறல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு கொண்ட ஒருவர் விசா பெற உதவி செய்தது தேவையற்ற ஒன்று. இதில் ஏன் பிரதமர் மவுனமாக இருக்கவேண்டும்.
இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு என தனியாகவும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கென தனியாகவும் விதிமுறைகள் உள்ளனவா?
சுஷ்மா ஸ்வராஜூக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆதரவாக பேசுவது சரியான செயல் அல்ல. உள்துறை அமைச்சர் என்கிற வகையில் அவர் தனது புலனாய்வு துறையை முடுக்கிவிட்டு லலித்மோடி பற்றிய தகவல்களை பெற்றிருக்கவேண்டும்.
எனவே லலித்மோடியின் பாஸ்போர்ட்டை முடக்கி அவரை நாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியை ராஜ்நாத் சிங் எடுக்கவேண்டும்.
இவ்வாறு ஆனந்த் சர்மா கூறினார்.