ரூ950 கோடி தீவன ஊழல் வழக்கு! 45 வழக்குகளில் தீர்ப்பு! 500 பேருக்கு சிறை!!
டெல்லி: நாட்டையே உலுக்கிய ரூ950 கோடி கால்நடை தீவன ஊழல் தொடர்பான 53 வழக்குகளில் 45வது வழக்கில் இன்று லாலு பிரசாத் உட்பட 45 பேர் குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை இந்த வழக்குகளில் 500க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்தபோது கால்நடைத்துறையில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் ரூ.950 கோடி ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், முன்னாள் ஜகநாத் மிஸ்ரா உள்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் மீது வழக்கு பதிவு செய்தது.

ஊழல் எப்படி?
கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியதாக போலி ரசீதுகளைக் காட்டி அரசு கருவூலத்திலிருந்து பணத்தை பெற்று அதிகாரிகள், அரசியல்வாதிகள் பகிர்ந்து கொள்வது, அதேபோல் தீவனம் வாங்கியதாக சொல்லப்படும் நபருக்கு 20% தொகையை மட்டும் கொடுத்துவிட்டு எஞ்சிய 80%-த்தை அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பங்கிட்டுக் கொண்டனர் என்று ஊழல் நடந்த விதம் பற்றி விசாரணையின் போது தெரியவந்தது.

சிபிஐ இயக்குநர் பிஸ்வாஸ்
இந்த வழக்கில் லாலு பெயரை சேர்த்தவர் மண்டல சிபிஐ இயக்குநர் யு.என்.பிஸ்வாஸ். இப்போது மேற்கு வங்க மாநில அமைச்சராக இருக்கிறார்.

61 வழக்குகள்
இந்த தீவன ஊழல் தொடர்பாக மொத்தம் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2000-ம் ஆண்டு பீகார் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பின்னர் இதில் 54 வழக்குகள் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு மாற்றப்பட்டன.

44 வழக்குகளில் தீர்ப்பு
இதுவரை மொத்தம் 44 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

500க்கும் மேற்பட்டோருக்கு சிறை
44 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

45 வது வழக்கில் லாலு குற்றவாளி
45 வது வழக்கில் லாலு உள்ளிட்ட 45 பேரை குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

லாலு மீதான வழக்கு என்ன?
அரசு பணம் ரூ.37.70 கோடியை முறைகேடாக பயன்படுத்தினர் என்பதுதான் லாலு உள்ளிட்டோர் மீதான வழக்கு.

சிபிஐ பெயர் சேர்த்ததால் ராஜினாமா
இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் பெயர் 1997ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. அப்போது அவர் முதல்வர் பதவியில் இருந்ததால் ராஜினாமா செய்தார்.

2000-ல் குற்றப் பத்திரிகை தாக்கல்
இந்த வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் உள்பட 56 பேர் மீது கடந்த 2000ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

2 பேர் அப்ரூவர்
இவர்களில் 2 பேர் அப்ரூவராக மாறி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர்.

8 பேர் மரணம்
இந்த வழக்கின் விசாரணை காலத்தின் போது 8 பேர் இறந்து விட்டனர்.

350 சாட்சிகள்..
லாலு வழக்கில் மொத்தம் 350 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.

13 ஆண்டு கால விசாரணை
13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணை முடிந்ததையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லாலு உட்பட 45 பேருமே குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.












Click it and Unblock the Notifications